அசுரனை சூரசம்ஹாரம் செய்த திருச்செந்தூர் முருகப் பெருமான்.. லட்சக்கணக்கான பக்தர்கள் விண்ணதிர முழக்கம்
திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நடைபெற்று முடிந்துள்ளது. திருச்செந்தூர் முருகன் சூரபத்மனை சூரசம்ஹாரம் செய்தார். இதனை லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் கடற்கரையில் குவிந்து, அரோகரா முழக்கத்துடன் கண்டு களித்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் திருச்செந்தூரில் கந்த சஷ்டி திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும். இந்த ஆண்டும் இந்த விழாவுக்காக சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30க்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், பிற்பகல் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெற்றது. இறுதியாக மாலை 4.30க்கு திருச்செந்தூர் கடற்கரையில் சூரசம்ஹார விழா நடைபெற்றது. இதனை காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

பக்தர்கள் அதிகாலையில் கடலில் நீராடி விரதமிருந்து சூரசம்ஹார நிகழ்வை காண குவிதனர். அதிக அளவில் பக்தர்கள் குவிந்துள்ளதால் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருக்கின்றனர். அதேபோல கடலில் குளிக்கும்போது கவனமாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர். மொத்தம் 4500க்கும் அதிகமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர். இதுதவிர 250க்கும் அதிகமான சிசிடிவி மூலம் பக்தர்களின் பாதுகாப்பை போலீசார் உறுதி செய்து வருகின்றனர்.
கூட்டம் அதிகளவில் இருப்பதால், தற்காலிகமாக 20 வாகன நிறுத்தங்கள் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. கடற்கரையில் இருந்து 50 மீட்டர் தூரத்திற்கு மட்டுமே பக்தர்கள் புனித நீராட அனுமதி வழங்கப்பட்டது. 100 க்கும் மேற்பட்ட கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
மாலை 4.30 மணியளவில் சூரசம்ஹாரம் செய்ய கடற்கரை நோக்கி சரண கோஷங்களுடன் படை பரிவாரங்களுடன் புறப்பட்டார் முருகப் பெருமான். அப்போது முருக பக்தர்களின் அரோகரா சரண கோஷங்களால் அதிர்ந்தது திருச்செந்தூர். அசுரன், மமதையுடன் முருகப் பெருமானை சுற்றி வலம் வந்தான்.
யானை முகத்தான் தாரகனை வதம் செய்த பின்னர் சிங்க முகத்தான் அசுரனை வதம் செய்வார் முருகப் பெருமான். மூன்றாவதாக ஆணவ வடிவிலான சூரபத்மனை வதம் செய்ய முருகனின் வீரவேல் புறப்பட்டது. அசுரன் சூரபத்மனை வதம் செய்தார் திருச்செந்தூர் முருகப் பெருமான். அசுரனை அழித்த முருகப்பெருமான் சந்தோஷ மண்டபத்துக்கு திரும்பினார்.












Click it and Unblock the Notifications