ஹைகோர்ட்டை முற்றுகையிட வக்கீல்கள் முயற்சி... தடுத்து கைது செய்த போலீஸ்
சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்ற நூற்றுக்கான வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டனர். போலீஸ் வேனில் ஏற மறுத்து ஒரு பிரிவு வழக்கறிஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு உருவாகியுள்ளது.
ஒழுங்கீனமாக நடந்துகொள்ளும் வழக்கறிஞர்கள் மீது உயர் நீதிமன்றம் மற்றும் கீழமை நீதிமன்றங்களே நடவடிக்கை எடுக்கும் வகையில் வழக்கறிஞர் சட்ட விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டு அமலுக்கும் வந்துள்ளது.
வழக்கறிஞர் சட்டம் 1961, பிரிவு 14 ஏ, பி, சி, டி ஆகியவற்றில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய திருத்தங்களின்படி, தவறு செய்யும் அல்லது மது அருந்தி ஒழுங்கீனமாக நடந்துகொள்ளும் வழக்கறிஞர்கள் மீது நீதிமன்றங்களே நேரடியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடியும்.
நீதிபதியின் பெயரைக் கூறி வழக்கறிஞர் பணம் வாங்கினார் என புகார் அளித்தால் அந்த வழக்கறிஞரை நீதிமன்றம் தகுதி நீக்கம் செய்யும். உயர் நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்ற வளாகங்களில் வழக்கறிஞர்கள் போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த தடை உள்ளிட்ட நடைமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.
வழக்கறிஞர் சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள சட்டத் திருத்தங்களை வாபஸ் பெற வலியுறுத்தி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில்கடந்த ஜூன் 1ம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
முற்றுகை போராட்டம்
போராட்டத்தின் ஒரு கட்டமாக இன்று உயர்நீதிமன்றத்தை முற்றுகையிடப் போவதாக அறிவித்தனர். திட்டமிட்டபடியே காலை 9.30 மணிக்கு வழக்கறிஞர்கள் போராட்டத்தை தொடங்கினர். வழக்கறிஞர்கள் பேரணியாக சென்றால் சென்னை பாரிமுனை பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பதற்றம் காரணமாக கடைகள் அடைக்கப்பட்டன.
குவிந்த வழக்கறிஞர்கள்
உயர்நீதிமன்றத்திற்கு வெளியே ஆவின் நுழைவுவாயிலில் குவிந்த 1000க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ழக்கறிஞர் சட்ட விதி திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
தடுப்பை மீறி உள்ளே நுழைய முயற்றி
வழக்கறிஞர்கள் போராட்டத்தை முன்னிட்டு சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தைச் சுற்றியும் போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர். ஆனால், ஆவின் நுழைவுவாயில் அருகே குழுமியிருந்த வழக்கறிஞர்கள் போலீசார் அமைத்துள்ள தடுப்பை மீறியும் உயர் நீதிமன்றத்துக்குள் நுழைய முற்பட்டனர்.
தள்ளுமுள்ளு
நீதிமன்றத்திற்குள் நுழைய முயன்ற வழக்கறிஞர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டனர். இதனால் போலீஸாருடன் வாக்குவாதம் நடைபெற்றது. தடுப்புக் கட்டையை தள்ளிக்கொண்டு வழக்கறிஞர்கள் உள்ளே நுழைய முயன்றதால் போலீசார், வக்கீல்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
வழக்கறிஞர்கள் கைது
போலீசாரின் தடுப்பை மீறி உயர்நீதிமன்றத்திற்குள் நுழைய முயன்ற வழக்கறிஞர்களை போலீசார் கைது செய்தனர். ஒரு பிரிவு வழக்கறிஞர்கள் போலீஸ் வேனில் ஏற மறுத்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.