ஜெ. மரணத்திற்கு விசாரணை கமிஷன்- அரசியல் தலைவர்களின் ஆதரவும் எதிர்ப்பும்
ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்தப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் பற்றி விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்தப்படும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
அதேபோல ஜெயலலிதா வாழ்ந்த போயஸ்தோட்ட இல்லமான வேதா நிலையத்தினை நினைவிடமாக மாற்றவும் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
முதல்வரின் இந்த அறிவிப்பு குறித்து பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.
தமிழிசை வரவேற்பு
முதல்வரின் நீதி விசாரணை அறிவிப்பை வரவேற்கிறேன் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். ஜெயலலிதா இல்லத்தை நினைவு இல்லம் ஆக்குவதும் வரவேற்க வேண்டிய அறிவிப்புதான் என்றும் அவர் கூறியுள்ளார்.
பாஜக அழுத்தம்
பாஜக அழுத்தத்தால் தான் முதல்வர் பழனிசாமி, இந்த இரண்டு அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளார் என்று டி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார். முதல்வரின் அனைத்து செயல்படுகளுக்கு பின்னாலும் பாஜகவின் அழுத்தம் உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
8 மாதம் கழித்து ஏன் அறிவிப்பு
ஜெயலலிதா மரணத்திற்கு விசாரணை தேவையில்லை என்று கூறியவர்களே இப்போது விசாரணை தேவை என்று கூறியுள்ளது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் டிகேஎஸ் இளங்கோவன். சசிகலா குடும்பத்தினரை அரசியலை விட்டு ஒதுக்கவே இதுபோன்ற அறிவிப்புகள் வெளியிடப்படுவதாக கூறியுள்ளார்.
தம்பித்துரை வரவேற்பு
கருத்து வேறுபாடுகளை மறந்து அதிமுக நிர்வாகிகள் செயல்பட வேண்டும் என தம்பிதுரை கூறியுள்ளார். சந்தேகத்தை களைவதற்காக நீதிவிசாரணை அறிவித்து இருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. முதல்வரின் இரு அறிவிப்புகளும் வரவேற்க வேண்டிய விஷயம் தான். ஓ. பன்னீர் செல்வம் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
திருநாவுக்கரசர் வரவேற்பு
ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம் அரசு நினைவிடமாக மாற்றப்படும் என்ற அறிவிப்பை வரவேற்பதாக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார். நீதி விசாரணை நடத்தினால் ஜெயலலிதா மரணத்தில் உள்ள சந்தேகங்கள் தீர்ந்து விடும் என்றும் கூறியுள்ளார்.
திருமாவளவன் கருத்து
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் இந்த கருத்து வரவேற்க வேண்டிய விசயமே என்று விசிக கட்சித்தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார். ஜெயலலிதா மரணத்திற்கு நீதி விசாரணை, வேதா நிலையம் அரசுடமையாக்கப்படும் என்ற அறிவிப்பை வரவேற்றுள்ளார் திருமாவளவன்.
நீதி விசாரணை எப்போது
ஜெயலலிதா வாழ்ந்த வீடு எத்தனை நாட்களில் நினைவு இல்லம் ஆக்கப்படும் என ராஜ்யசபா எம்.பி சசிகலா புஷ்பா கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் டி.டி.வி. தினகரனுடன் மோதல் ஏற்பட்ட பிறகுதான் நீதி விசாரணையை முதல்வர் அறிவிக்கிறார் எனவும் அவர் கூறியுள்ளார்.