கேஸ் என்ன கேஸ்.. என்னை துப்பாக்கியால் சுட்டாலும் தாங்கிக் கொள்வேன்.. மு. க.ஸ்டாலின் ஆவேசம்
தூத்துக்குடியில் இருக்கும் போலீஸ் என்னை சுட்டாலும் தாங்கிக்கொள்வேன் என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார்.
Recommended Video
தூத்துக்குடி: தூத்துக்குடியில் இருக்கும் போலீஸ் என்னை சுட்டாலும் தாங்கிக்கொள்வேன் என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார். தூத்துக்குடி படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சட்டமன்ற அலுவல் கூட்டத்தை புறக்கணித்துள்ளது.
மக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூட கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க அமைதிப் பேரணியை நடத்திய பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது. போலீசின் இந்த கண்மூடி தனமாக தாக்குதல் காரணமாக இதுவரை 14 பேர் பலியாகி உள்ளனர். ஆனாலும் இதைவிட அதிக பேர் பலியாகி இருக்கலாம் என்று அச்சமூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
போலீஸ் நடத்திய துப்பாக்கி சூட்டில் இதுவரை அதிகாரப்பூர்வமாக 13 பேர் மரணம் அடைந்துள்ளனர். 25க்கும் அதிகமானோர் என்ன ஆனார்கள், எங்கே இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. இதில் 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இதில் சிலர் மிகவும் மோசமான நிலையில் கவலைக்கிடமாக உள்ளனர்.
செய்தியாளர்களுக்கு ஸ்டாலின் பேட்டி
தூத்துக்குடி படுகொலையை தொடர்ந்து சட்டசபையின் அலுவல் ஆய்வு கூட்டத்தை திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் புறக்கணித்துள்ளது. இதன் பின் சட்டசபையில் இருந்து வெளியே வந்த ஸ்டாலின் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார்.
முதல்வர் ஏன் போகவில்லை
கடந்த மூன்று நாட்களாக தூத்துக்குடி நகரமே கொந்தளிப்பாக இருக்கிறது. தூத்துக்குடி மாவட்ட கலெக்டர், எஸ்பி ஆகியோரை மாற்றியுள்ளனர். ஆனால் அவர்கள் மீது இதுவரை நடவடிக்கை இல்லை. இதுவரை முதல்வர் தூத்துக்குடி செல்லவில்லை. அங்கு யாருரையும் பார்த்து ஆறுதல் கூட சொல்லவில்லை.
செயலற்றுப் போன அரசு
இது அரசு செயலற்று இருக்கிறது என்பதை காட்டுகிறது. எத்தனையோ ஆட்சியை பார்த்துள்ளோம். ஆனால் அப்போதெல்லாம் அரசு பக்கம் மக்கள் இருந்தனர். இப்போது துப்பாக்கி சூடு நடத்த பயிற்சி பெற்ற அதிகாரிகளை பயன்படுத்தியுள்ளனர். இப்படி எல்லாம் இதற்கு முன்பு நடந்தது இல்லை. உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் இதை விசாரிக்க வேண்டும்.
முதல்வர் விலக வேண்டும்
தனது பதவியை காப்பாற்ற முதல்வர் முயற்சி செய்கிறார். அதனால்தான் அவர்கள் யோசித்துக் கொண்டுள்ளனர். அதிமுக போராடுவது எல்லாம் அதற்குத்தான். முதல்வர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். டிஜிபி ராஜேந்திரனை பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும். இதை சொல்லிவிட்டுதான் நாங்கள் அலுவல் கூட்டத்தை புறக்கணித்துள்ளோம்.
சுட்டாலும் தாங்குவேன்
என் மீது வழக்கு போட்டுள்ளார்கள். என்ன செய்தாலும் தாங்கிக்கொள்வேன். அங்கே குண்டடி பட்டு மக்கள் இறந்துள்ளனர். வழக்கு என்ன அங்கே இருக்கும் போலீஸ் என்னை வந்து சுட்டுக் கொன்றாலும் தாங்கிக் கொள்வேன் என்று உருக்கமாக பேட்டியளித்துள்ளார்.