தமிழகத்தில் பூரண மதுவிலக்கு: ஜி.கே.வாசன் தலைமையில் த.மா.கா. முதல் உண்ணாவிரத போராட்டம்
சென்னை: தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில், சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
மனித உரிமை மீறுதல் குறித்து சர்வதேச விசாரணைக்கு இலங்கை அரசு ஒத்துழைக்க வேண்டும். இலங்கையில் தமிழர்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும். கச்சத்தீவு பகுதியில் மீன் பிடி உரிமையை மீட்டுத் தரவேண்டும். தமிழகத்தில் பூரண மது விலக்கை அமுல்படுத்த வேண்டும். தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி த.மா.கா. சார்பில் இன்று உண்ணாவிரதம் நடைபெறும் என்று ஜி.கே.வாசன் அறிவித்து இருந்தார். அதன்படி இன்று காலையில் சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
காலை 10 மணியளவில் உண்ணாவிரத பந்தலுக்கு வந்த ஜி.கே.வாசன், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார். த.மா.கா. தொடங்கிய பிறகு மாநில அளவிலான முதல் உண்ணாவிரத போராட்டம் என்பதால் மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் பெருமளவில் பங்கேற்றார்கள்.
இந்த போராட்டத்தில் பேசிய ஜி.கே.வாசன், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி பல்வேறு போராட்டங்களை நடத்தியது. அதன் தொடர்ச்சியாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒரு கோடி கையெழுத்து இயக்கம் தமிழகம் முழுவதும் தமாகாவினரால் நகரம் முதல் கிராமம் வாரியாக நடத்தப்பட்டு வருகிறது என்றார்.
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும், இலங்கை கடற்படையால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், இலங்கை விவகாரத்தில் சர்வதேச விசாரணை நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஜி.கே.வாசன் வலியுறுத்தினார்