உள்ளாட்சித் தேர்தல்: 4.97 லட்சம் பேர் வேட்புமனுக்கள் தாக்கல்- இன்று பரிசீலனை
சென்னை : தமிழக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், அம்மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெறுகிறது. கடைசி நாளான நேற்று வரை உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட 4.97 லட்சம் பேர் வேட்புமனுக்கள் தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தின் உள்ளாட்சி பதவியிடங்களுக்கான தேர்தல் அறிவிக்கை செப்டம்பர் 25ம் தேதி வெளியிடப்பட்டது. 26ம் தேதியில் இருந்து வேட்புமனு தாக்கல் தொடங்கியது. இதைத் தொடர்ந்து, அதிமுக, திமுக, பாமக என அங்கீகாரம் பெற்ற அனைத்து கட்சிகள் சார்பில் பலர் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளான நேற்று வரை மொத்தம் 4 லட்சத்து 97 ஆயிரத்து 840 பேர் மனு தாக்கல் செய்துள்ளதாக மாநில தேர்தல் ஆணையர் சீதாராமன் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 50 ஆயிரம் பேர் அதிகமாக வேட்புமனுத் தாக்கல் என்று தேர்தல் ஆணையர் சீத்தாராமன் கூறியுள்ளார். கடைசி நாளான நேற்று 2,45,802 பேர் வேட்பு மனுத்தாக்கல் என தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்று வருகிறது. இன்று மாலையில்தான் எத்தனை பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பது தெரியவரும்.
வேட்பு மனுக்களை திரும்பப் பெற வருகிற 6 ஆம் தேதி கடைசி நாளாகும். இதன்பின்னரே உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுபவர்கள் யார் யார் என்ற தகவல் தெரியவரும். இரண்டு கட்டமாக நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற அக்டோபர் 17,19 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதன் வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 21ஆம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.