சென்னையில் திடீர் கனமழை.... சாலைகளில் வெள்ளம் - இன்றும் மழைக்கு வாய்ப்பு #Chennairain
தெற்கு அந்தமானை சுற்றியுள்ள வங்கக்கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் சென்னையில் காலை முதல் கனமழை கொட்டி வருகிறது
சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் தீவிரம் தொடங்கி விட்டது. சென்னையில் காலை நேரத்தில் திடீரென கனமழை கொட்டியதால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களும், அலுவலகத்திற்கு செல்பவர்களும் சிரமத்திற்கு ஆளாகினர்.
தெற்கு அந்தமானை சுற்றியுள்ள வங்கக்கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளதாகவும், இதனால் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யலாம் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வடகிழக்குப் பருவமழை தமிழகத்தில் அக்டோபர் 30ம் தேதி தொடங்கியுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று இரவு நேரங்களில் மழை பெய்யலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று காலை முதல் லேசான சாரல் மழை பெய்தது. இந்த சாரல் மழை படிப்படியாக வலுவடைந்து கனமழை பெய்தது.
காலை 7.30 மணியளவில் கொட்டத்தொடங்கிய மழை அரைமணிநேரம் தீவிரமாக பெய்து கொட்டித் தீர்த்தது. இதனால் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்தது. பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களும், அலுவலகம் செல்பவர்களும், சிரமத்திற்கு ஆளாகினர். மழை நின்றாலும், சாரல் மழை நீடிக்கிறது.
இந்தநிலையில், தெற்கு அந்தமான் கடலைச் சுற்றியுள்ள பகுதிகளில் உருவான மேலடுக்கு காற்று சுழற்சி வலுப்பெற்று, காற்றழுத்தத் தாழ்வுநிலை உருவாகி உள்ளது.
இது மேலும் வலுப்பெற்று அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வடக்கு வடமேற்காக நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தென்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என்றும் சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் மழையோ, இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேற்கு தமிழகம் மற்றும் கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் காற்று மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட தென்தமிழகத்திலும், தமிழகத்தில் உள்மாவட்டங்களிலும் அநேக இடங்களில் மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
வடகிழக்கு பருவமழையின் தீவிரத்தால் நேற்று மாலை விருத்தாச்சலத்தை அடுத்த விக்கிரவாண்டியில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதே போல கிருஷ்ணகிரி, தாம்பரம், உடுமலைப்பேட்டை, திருப்பூர், பொள்ளாச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர் உட்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில், தொடர்ந்து மழை பெய்து வருவதால், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. தென்மேற்கு பருவமழை ஏமாற்றிய நிலையில் வடகிழக்கு பருவமழையால் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருவது விவசாயிகளை சற்றே ஆறுதல் படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. நவம்பர் 10ம் தேதிக்கு மேல் தீவிரமடைந்தது. நவம்பர் இறுதியில் பெய்த வரலாறு காணாத மழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழையால் லட்சக்கணக்கான மக்கள் உடமைகளை இழந்தனர். சென்னை நகரை பெருவெள்ளம் தாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.