கண்கள் பனித்து இதயம் இனிப்பது எப்போது?.. கருணாநிதியுடன் அழகிரி மீண்டும் கோபாலபுரத்தில் சந்திப்பு!
திமுக தலைவர் கருணாநிதியை மு.க.அழகிரி இன்று நேரில் சந்தித்துள்ளார்.
சென்னை : திமுக தலைவர் கருணாநிதியை முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி இன்று கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.
கடந்த 2014ம் ஆண்டு கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக மு.க.அழகிரி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பிறகு அழகிரி தனி அரசியல் கட்சியாக செயல்படுவார் என்று அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்தனர். நேரம் வரும் போது தன்னுடைய நிலைப்பாட்டை தெரிவிப்பதாக சொன்ன அழகிரி 2016 சட்டமன்ற தேர்தலிலும் கூட ஒதுங்கியே இருந்தார்.
அழகிரி கட்சியில் மீண்டும் இணைத்துக் கொள்ளப்படுவதற்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவிப்பதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், திமுக மட்டுமின்றி ஒட்டுமொத்த அரசியலில் இருந்துமே ஒதங்கியே இருந்தார் அழகிரி. இதனிடையே திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஆண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கட்சியை வழிநடத்த திமுகவின் செயல்தலைவராக ஸ்டாலின் அறிவிக்கப்பட்டார்.

விலகி இருந்த அழகிரி
கட்சியில் ஸ்டாலினின் கை ஓங்கியதைக் கண்டு அழகிரி வெடித்தெழுவார் என்று கருதப்பட்ட நிலையில் அப்போதும் அமைதி காத்தே வந்தார். கட்சி பற்றி விமர்சிக்க தான் கட்சியில் இல்லை என்று 2 மாதங்களுக்கு முன்னர் கோபாலபுரம் வந்து தாயார் தயாளு அம்மாளை சந்தித்துவிட்டு சென்ற போது அழகிரி கூறி இருந்தார்.

கருணாநிதி அழைத்தால்
இந்நிலையில் கடந்த மாதம் கோபாலபுரத்தில் நடந்த குடும்பத் திருமண விழாவில் மு.க.அழகிரி தன்னுடைய குடும்பத்தினருடன் பங்கேற்றார். அப்போது திமுக தலைவரும் தன்னுடைய தந்தையுமான கருணாநிதியை அழகிரி சந்தித்துவிட்டு சென்றார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கருணாநிதி அழைத்தால் மீண்டும் அரசியலுக்கு வருவேன் என்று கூறி இருந்தார்.

கோபாலபுரத்தில் சந்திப்பு
இதனிடையே இன்று மீண்டும் கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதியை சந்தித்து மு.க.அழகிரி நலம் விசாரித்துள்ளார். கருணாநிதி மீது கட்சி ரீதியில் கோபமாக இருந்தாலும் கடந்த முறை தந்தையைப் பார்த்த அழகிரி தன்னுடன் வந்து மதுரையில் இருக்குமாறு கேட்டிருந்தார்.

எப்போது இணைப்பு?
கருணாநிதி உடல்நிலை தேறிய நிலையில் அழகிரி அடுத்தடுத்து அவரை சந்தித்துவிட்டு செல்கிறார். எனவே விரைவில் கண்கள் பனித்து இதயம் இனித்ததாக அறிவிப்பு வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர் அழகிரியின் ஆதரவாளர்கள். முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி கருணாநிதியை சந்தித்தற்கும் அழகிரி நன்றி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications