ஓட்டு போட்ட மக்களின் விரலில் மை வைத்து அவமானப்படுத்துவதா?- ஸ்டாலின்
பணத்தை மாற்ற வரும் மக்களின் கைகளில் மை வைக்கப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பு அதிர்ச்சியளிக்கிறது என்று திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
மதுரை: வங்கியில் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை எடுக்க வருபவர்களின் கைகளில் மை வைப்பது ஓட்டு போட்ட மக்களை அவமானப்படுத்துவது போல உள்ளது என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.
கறுப்பு பணத்தை பிறரிடம் கொடுத்து மாற்றி வருவதாக எழுந்த புகாரை அடுத்து பணத்தை மாற்ற வருபவர்களின் கைகளில் அழியாத மை வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த மை வைக்கும் முறை உடனடியாக அமலுக்கு வரும் என்றும் பொருளாதார விவகாரத்துறை செயலர் சக்தி காந்த தாஸ் கூறினார்.

கறுப்பு பணம் வைத்திருப்பவர்கள், கூலிக்காக அப்பாவிகளை வங்கி வாசலில் நிற்க வைத்து அவர்களின் அடையாள அட்டையை பயன்படுத்தி ஒரே நாளில் பல ஆயிரம் ரூபாய் பணத்தை மாற்றி வருவதாகவும், ஒருவரே தொடர்ந்து பலமுறை வங்கிக்கு வந்து பணத்தை மாற்றி வருவதாகவும் சக்தி காந்த தாஸ் குற்றம் சாட்டினார்.
இதை தடுக்கும் வகையிலேயே மத்திய அரசு வங்கிக்கு பணம் மாற்ற வருபவர்களின் கைகளில் மை வைக்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மத்திய அரசின் அறிவிப்புக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின், ஓட்டுப்போடும் போது மட்டுமே மை வைக்கப்படுவது வழக்கம். இப்போது பணத்தை மாற்ற வங்கிக்கு வரும் மக்கள் கையில் மை வைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. இது ஓட்டுப்போட்ட மக்களை அவமானப்படுத்தும் செயல் என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications