திமுக ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு அமல்... மாணவர்கள் மத்தியில் உறுதி அளித்த ஸ்டாலின்
தூத்துக்குடி: மாணவர்களுக்கு இலவச பஸ் சேவை, பட்டப்பட்டிப்பு வரை இலவச கல்வி, கிராமப்புற மக்களும் பயன்பெறும் வகையில் நுழைவுத்தேர்வு ரத்து உள்ளிட்டவைகளை திமுக அரசு தான் கொண்டு வந்தது என்று தூத்துக்குடியில் மாணவர்கள் மத்தியில் பேசிய மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். தி.மு.க ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்றும் கூறியுள்ளார் ஸ்டாலின்.
நமக்கு நாமே என்ற விடியல் மீட்பு பயணத்தை தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார். அந்த பயணத்தின் நான்காம் நாளான இன்று, தூத்துக்குடி மாவட்டம் பொன்னன்குரிச்சியில் விவசாயிகளுடன் மு.க.ஸ்டாலின் பேசினார்.
பயணத்தின் நோக்கம்
மக்களை நேரடியாக சந்தித்து, குறைகளை கேட்டறிந்து தீர்ப்பதே இந்த பயணத்தின் முக்கிய நோக்கம். நான் பயணம் செய்யும் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியில் உள்ள பிரச்னைகளை கேட்டு வருகிறேன். ஜெயலலிதா ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகளில் எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை.
விவசாயிகள் தற்கொலை
விவசாயிகளுக்கு எதிரான நிலம் எடுப்பு மசோதாவை எதிர்த்து வாக்களித்தது தி.மு.க. விவசாயிகளின் கடன் ரூ.7 ஆயிரம் கோடியை தள்ளுபடி செய்தது தி.மு.க. ஆட்சியில் தான். அதை தலைவர் கலைஞர் அறிவித்தபோது நாங்களே நம்பவில்லை. ஆனால் கலைஞர் தள்ளுபடி செய்து சாதித்து காட்டினார். இந்த ஆண்டு மட்டும் 68 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தி.மு.க. ஆட்சிக்கு வந்த உடன் விவசாயிகளின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்.
அதிகாரிகள் தற்கொலை
அனைகளை தூர்வாருவதற்கும், அதை கண்காணிப்பதற்கும் தமிழ்நாட்டில் குழு அமைக்க வேண்டும் என்று பசுமைத் தீர்பாயம் உத்தரவிட வேண்டிய நிலை உள்ளது. அதிகாரிகள், ஆட்சியாளர்களின் நெருக்கடி தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொள்கிறார்கள். அந்த வகையில் விஷ்ணுபிரியா தற்கொலையை விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போதாது. அந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும். தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வரும் என மக்களிடையே நம்பிக்கை ஏற்பட்டு உள்ளது" என்றார்.
மாணவர்களிடம் பேச்சு
தூத்துக்குடியில் கலைக்கல்லூரி, சட்டக்கல்லூரி மாணவர்களிடையே ஸ்டாலின் பேசினார். அப்போது மாணவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். மாணவர்களின் கல்விக்கடன்கள், விவசாயக்கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும் என்றும், சட்டக்கல்லூரி படித்து முடித்து பயிற்சியில் ஈடுபடுபவர்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
உரிமை கொண்டாடுவதா?
மாணவர்கள் பேசிய பின்னர் அவர்கள் மத்தியில் பேசிய ஸ்டாலின், மாணவர்களுக்கு இலவச பஸ் சேவை, பட்டப்பட்டிப்பு வரை இலவச கல்வி, கிராமப்புற மக்களும் பயன்பெறும் வகையில் நுழைவுத்தேர்வு ரத்து உள்ளிட்டவைகளை திமுக அரசு தான் கொண்டு வந்தது. ஆனால், தற்போதைய அரசோ, அதற்கு உரிமை கொண்டாடி வருகிறது.
மதுவிலக்கு
தமிழகத்தில் பச்சிளம் குழந்தைகள் முதல் பள்ளி மாணவர்களும், இளைஞர்களும் மதுவினால் சீரழிந்து வருகின்றனர். திமுக ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார். இன்றைய முதல்வர் தினசரி 110 அறிக்கையை வாசிக்கிறார். அதேபோல ஒரு 110 அறிக்கை வாசித்து மதுவிலக்கை அமல்படுத்தலாம் என்றார் ஸ்டாலின். நாட்டின் எதிர்காலமாகிய நீங்கள் கூறியவற்றை குறிப்பு எடுத்து வைத்துள்ளேன். தங்களது ஆலோசனைகள் நிச்சயமாக பரிசீலிக்கப்படும் என்றும் ஸ்டாலின் கூறினார்.