தமிழர்களின் உணர்வோடு விளையாடுவது நல்லதல்ல.. பாஜக உணர வேண்டும்.. ஸ்டாலின் வார்னிங்
தமிழர்களின் உணர்வோடு விளையாடுவது நல்லதல்ல என்பதை பாஜக புரிந்து கொள்ள வேண்டும் என்று மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்
சென்னை: தமிழர் திருநாளான பொங்கலை விருப்ப விடுமுறையில் இருந்து நீக்கி கட்டாய விடுமுறை பட்டியலில் சேர்த்ததற்கு திமுகவின் செயல் தலைவரும் தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.
தமிழகத்தில் கிளர்ந்து எழுந்த எதிர்ப்பை அடுத்து கட்டாய விடுமுறைப் பட்டியலில் பொங்கல் சேர்த்திருப்பதற்கு வரவேற்பைத் தெரிவித்துள்ள ஸ்டாலின், தமிழர்களின் உணர்வோடு விளையாடுவது நல்லதல்ல என்பதை பாஜக அரசு உணர வேண்டும் என்றும் எச்சரித்துள்ளார்.
மேலும், பொங்கல் திருநாளை கட்டாய விடுமுறைப் பட்டியலில் இருந்து நீக்கிய அதிகாரி மீது நடவடிக்கை வேண்டும் என்றும் ஸ்டாலின் கோரியுள்ளார். மேலும், இதனை செயல்படுத்த தூண்டுதலாக இருந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.
பொங்கலுக்கு கட்டாய விடுமுறை இல்லை என்று நேற்று மத்திய அரசு அறிவித்ததையடுத்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனைத் தொடர்ந்து பொங்கலுக்கு விருப்ப விடுமுறை என்பதை மத்திய பாஜக அரசு திரும்பப் பெற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.