For Quick Alerts
For Daily Alerts
Just In
சாமானியர்களுக்கும் எளிய முறையில் தமிழைக் கற்றுக்கொடுத்த முனைவர் மா.நன்னன்
கடலூரில் பிறந்து தமிழை சுவாசித்த முனைவர் மா.நன்னன் இன்று வயது முதிர்வினால் காலமானார். எளிய தமிழை அனைவருக்கும் கற்றுக்கொடுத்தவர் மா. நன்னன்.
Recommended Video
தமிழர்கள் வணக்கம் சொல்லவே கூடாது! ஏன் தெரியுமா?- வீடியோ
சென்னை: முதுபெரும் தமிழறிஞரும் பேராசிரியருமான மா. நன்னன் இன்று மரணமடைந்தார். சென்னைத் தொலைக்காட்சியில் 'எண்ணும் எழுத்தும்' என்ற தலைப்பில் 17 ஆண்டுகள் தமிழ் கற்பித்து எளியமுறையில் சாமானிய மக்களுக்கும் தமிழை புரிய வைத்தவர் மா. நன்னன்.
கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தை அடுத்த சாத்துக்குடல் எனும் ஊரில் 1924ஆம் ஆண்டு ஜூலை 30ஆம் தேதி பிறந்தவர் மா.நன்னன். இவரது இயற்பெயர் திருஞானசம்பந்தன்.
தனது சொந்த ஊரை அடுத்த திருமுட்டத்தில் 8-ம் வகுப்பு வரை பயின்றார். சிதம்பரத்தில் புகுமுக வகுப்பு தேர்ச்சி பெற்று, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புலவர் பட்டம் பெற்றார். தமிழ் மீது கொண்ட அளவு கடந்த பற்றால், தன் பெயரை நன்னன் என மாற்றிக் கொண்டார்.
- சுதந்திர போராட்ட இயக்கத்தில் பங்கேற்றுள்ளார் கல்லூரியில் படித்த போதே 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தில் பங்கேற்றார். இந்தி எதிர்ப்பு போராட்டத்திலும் பங்கேற்றவர்.
- தொடக்கப்பள்ளி ஆசிரியராகப் பணியைத் தொடங்கினார். ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டே சென்னை பல்கலைக்கழகத்தில் இன்டர்மீடியட், பி.ஏ., எம்.ஏ. பட்டங்களைப் பெற்றார்.
- தொல்காப்பியப் பேராசிரியர் பற்றி ஆய்வு செய்து முனைவர் பட்டமும் பெற்றார். உயர்நிலைப் பள்ளி, பயிற்சிக் கல்லூரி, கலைக்கல்லூரி, மாநிலக் கல்லூரிகளில் பணியாற்றினார். பின்னர் தமிழ் வளர்ச்சித் துறையின் இயக்குநராகவும் பணியாற்றினார்.
- 1942 முதல் கல்வியியல், சமூகவியல், அரசியல், தொழிலாளர் இயல் குறித்து பல மேடைகளில் பேசியுள்ளார். வயது வந்தோர் கல்வி வாரியத் துணைத் தலைவராகப் பொறுப்பு வகித்தவர்.
- எழுத்தறிவித்தலில் நன்னன் முறை என்ற புதிய முறையையே உருவாக்கியவர். தமிழ் இணையப் பல்கலைக்கழக வாயிலாக இவர் கற்றுக்கொடுத்த முறையை கோலாலம்பூர், லண்டனில் உள்ள தொலைக்காட்சிகள் ஒளிபரப்பின.
- சென்னைத் தொலைக்காட்சியில் 'எண்ணும் எழுத்தும்' என்ற தலைப்பில் 17 ஆண்டுகள் தமிழ் கற்பித்தார். இவரது தமிழ் கற்பித்தல் முறைக்காகவே பலரும் தூர்தர்சன் தொலைக்காட்சியை பார்த்தனர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அந்த நிகழ்ச்சியின் மூலம் தமிழை எளிய முறையில் கற்றுக்கொண்டனர்.
- கட்டுரைகள், ஆய்வுக் கருத்தரங்கக் கட்டுரைகள், பாடநூல்கள், துணைப்பாட நூல்கள் என நிறைய எழுதியுள்ளார். 1990 - 2010-க்கு இடைப்பட்ட காலத்தில் சுமார் 70 நூல்களை எழுதினார்.
- பெரியாரின் கொள்கைகளில் பற்று கொண்டிருந்த இவர், அதைக் குறித்தும் பல நூல்களை எழுதியுள்ளார்.
- இவற்றில் 'பெரியாரைக் கேளுங்கள்' என்ற நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2009-ம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சமூகவியல் வகைப்பாட்டில் பரிசு பெற்றது.
- உரைநடையா? குறைநடையா?, எல்லார்க்கும் தமிழ், தவறின்றி தமிழ் எழுதுவோம், திருக்குறள் மூலமும் விளக்க உரையும், பைந்தமிழுரைநடை நைந்திடலாமா?, வாழ்வியல் கட்டுரைகள், தமிழ் எழுத்தறிவோம், கல்விக் கழகு கசடற எழுதுதல் உள்ளிட்ட இவரது நூல்கள் குறிப்பிடத்தக்கவை.
- தமிழக அரசின் சமூக சீர்திருத்தக் குழுத் தலைவராகவும், அஞ்சல்வழிக் கல்லூரியின் முதல்வராகவும் செயல்பட்டுள்ளார்.
- தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தமிழைப் பிழையின்றி எழுதுவதற்கும் வாக்கியங்களை முறையாக அமைப்பதற்குமான சிறந்த ஆலோசனைகளை வழங்கியதோடு, தமிழ்ப் பயன்பாட்டில் உள்ள நிறை குறைகளையும், குறைகளைத் தவிர்ப்பதற்கான தீர்வுகளையும் அந்நிகழ்ச்சியில் அலசி ஆராய்ந்தார்.
- பெரியார் விருது, தமிழ்ச்செம்மல் விருது, திரு.வி.க. விருது முதலிய விருதுகளைப் பெற்றுள்ளார்.
- நன்னன் குடி என்ற பெயரில் செயல்பட்டுவரும் அறக்கட்டளை, கல்வியில் சாதனை புரியும் மாணவர்களுக்கும் பல்வேறு தமிழ்ப்பணிகள், சமூகப் பணிகளில் தடம் பதிப்போருக்கும் பரிசளித்து ஊக்குவித்து வருகிறது.
- சைதாப்பேட்டையில் வசித்து வந்த முனைவர் மா.நன்னன் இன்று தனது 94வது வயதில் வயது முதிர்வினால் மரணமடைந்துள்ளார். அவரது மறைவு தமிழர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Comments
English summary
M. Nannan was a noted educationist, socio-political activist and scholor in his style. He served as a Professor of Tamil at the Presidency college, Chennai.