மாதொருபாகன் என்பது சிவனின் பெயர்: சொல்கிறார் ஆதிரா பாண்டிலட்சுமி
மாதொருபாகன் என்று படத்திற்கு தலைப்பு வைக்க யாரிடமும் அனுமதி கேட்கத் தேவையில்லை. அது சிவனின் பெயர். இந்த படத்தின் கதை என்னுடைய சொந்தக்கதை என்று படத்தின் இயக்குநர் ஆதிரா பாண்டிலட்சுமி கூறியுள்ளார்.
எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய மாதொரு பாகன் என்ற நாவல் திருச்செங்கோட்டில் உள்ள ஒரு கோவிலையும், அப்பகுதி மக்களையும் இழிவுபடுத்துவதாக கூறி சென்ற மாதம் பெரிய அளவிலான போராட்டங்கள் நடந்தன.
எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு கடும் எதிர்ப்புகளும் எழுந்த காரணத்தால் மனம் கசந்த பெருமாள் முருகன் அந்த நாவலை தான் வாபஸ் பெற்றுக் கொள்வதாகவும், இனிமேல் தான் எழுதப் போவதில்லை என்றும், பெருமாள் முருகன் என்னும் எழுத்தாளன் செத்துவிட்டான் என்றும் சொல்லி இந்த எழுத்தாளர் உலகத்தில் இருந்து முற்றிலும் தன்னை விலக்கிக் கொண்டார்.
இது நாள்வரையிலும் போலீஸ் பாதுகாப்புடன் நாமக்கலில் வசித்து வந்த பெருமாள்முருகன் தற்போது சென்னைக்கு மாற்றலாகி வந்துவிட்டார்.
சர்ச்சை தலைப்பில் சினிமா
தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பிய அந்த ‘மாதொருபாகன்' பெயரிலேயே புதிய தமிழ் சினிமா தயாராகிவருகிறது. இதனைக் கேள்விப்பட்டவுடனேயே எழுத்தாளர் பெருமாள் முருகன் ஒரு அறிக்கையை வெளிட்டார். அதில் இந்த சர்ச்சையை மென்மேலும் பரப்புரை செய்ய வேண்டாம். சினிமாவாக்கும் முயற்சிக்கும் தனக்கும் எந்தத் தொடர்புமில்லை என்றார்.
பெண் இயக்குநர்
இந்தப் படத்தை பெண் இயக்குனர் ஆதிரா பாண்டிலட்சுமி என்பவர் இயக்குகிறார். "எழுத்தாளர் பெருமாள் முருகனின் நாவலுக்கும், இதற்கும் சம்பந்தமில்லை. இது என்னுடைய சொந்தக் கதை என்று கூறியுள்ளார்.
அனுமதி தேவையில்லை
‘மாதொரு பாகன்' என்பது பெண்களுக்கு சம பங்கு கொடுத்த சிவபெருமானின் பெயர். இந்த பெயரை வைப்பதற்கு யாரிடமும் அனுமதி பெறத் தேவையில்லை.
ஆணின் கதாபாத்திரம்
அழிந்து வரும் தமிழ் பாரம்பரிய கலைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்கிற விஷயம்தான் படத்தின் கரு. படத்தில் முக்கியமான ஒரு ஆண் கேரக்டர் இருக்கு. அந்த கேரக்டரைப் பார்த்தா, இப்படி ஒரு கணவன் அல்லது இப்படி ஒரு காதலன் நமக்குக் கிடைக்கணும்னு எல்லா பெண்களும் ஏங்குவாங்க.
என்னுடைய கதை
அந்த கேரக்டர்ல நடிக்கிறதுக்கு ஒரு பெரிய நடிகர்கிட்ட பேசிட்டு இருக்கோம். இந்தப் படம் மதம், சாதி, அரசியலுக்கு சரியான சாட்டையடியா இருக்கும். இப்போ இசை வேலைகள் நடந்துக்கிட்டிருக்கு.
குத்துப்பாட்டு
ரசிகர்களுக்கு ஏற்ப செம குத்துப் பாட்டு ஒண்ணும் இருக்கு. வரும் ஏப்ரல் மாதம் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது.
இரண்டு வருடத்துக்கு முன்பேயே ‘மாதொரு பாகன்' என்ற தலைப்பை தயாரிப்பாளர் கவுன்சிலில் பதிவு செய்து கதையையும் உருவாக்கிவிட்டேன். சில காரணங்களால் அப்போது துவக்க முடியவில்லை என்றும் கூறியுள்ளார் ஆதிரா பாண்டிலட்சுமி.
பிரபலமான நேரத்தில்
ஒரு சம்பவம் சர்ச்சையானால் அதை வைத்து சினிமா எடுக்க நம்ம ஆட்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டுமா என்ன? எது எப்படியோ புத்தகத்தைப் போல படம் சர்ச்சையைக் கிளப்பாமல் நன்றாக ஓடினால் சரிதான்.