மலைவாசிகளை மதமாற்றம் செய்ய முயன்றதாக தூத்துக்குடியைச் சேர்ந்த 8 பேர் ம.பியில் கைது!
தூத்துக்குடி: தூத்துக்குடியில் இருந்து கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்காக மத்தியப்பிரதேசம் சென்ற ஒரு குழுவினர் கட்டாயம் மதமாற்றம் செய்ய முயன்றதாக கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள பழனியப்பபுரத்தை சேர்ந்தவர் பால்ராஜ் (46). இவரது மனைவி கவிதா (42). இத்தம்பதியினர் அப்பகுதியில் ரட்சணியபேழை என்ற அமைப்பை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 22ம் தேதி தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் கிறிஸ்துமஸ் கொண்டாட நெல்லையில் இருந்து ரயில் மூலம் மத்தியபிரதேசம் சென்றுள்ளனர் இத்தம்பதியினர். மத்தியப்பிரதேசம் சென்ற குழுவில் 8 ஆண்கள், 8 பெண்கள், 3 குழந்தைகளும் இருந்துள்ளனர்.
இந்நிலையில், அக்குழுவைச் சேர்ந்த சிலர் சென்னையில் உள்ள சிலரை போன் மூலம் தொடர்பு கொண்டு தங்களை மத்தியப்பிரதேசத்தில் போர்கான் பகுதியில் உள்ள கலோனி என்ற இடத்தில் உள்ளூர் அரசியல்வாதிகள் தலைமையிலான குழு ஒன்று கடத்திச் சென்றதாகவும், பின்னர் அவர்களிடமிருந்து போலீஸ் மீட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
இது தூத்துக்குடி மற்றும் குமரியை சேர்ந்தவர்கள் மத்தியபிரதேசத்தில் கடத்தப்பட்டதாக தகவல்கள் பரவி பரபரப்பை உண்டாக்கியது. இதனைத் தொடர்ந்து சென்னை மற்றும் தூத்துக்குடி காவல்துறை அதிகாரிகள் மத்தியப்பிரதேச போலீசாரைத் தொடர்பு கொண்டு இது தொடர்பாக விசாரணை நடத்தினர்.
அதில், பால்ராஜ் தலைமையில் சென்ற குழு ஒன்று கலோனி மலைப்பிரதேச மக்களிடம் தங்கள் மதம் சார்ந்துள்ள மதத்திற்கு மாற வலியுறுத்தி பேசி அங்குள்ள சிலரின் உதவியுடன் துண்டு பிரசுரங்கள் விநியோகித்துள்ளதாகவும், இதனையறிந்த அங்குள்ள ஒரு அரசியல் கட்சி பிரமுகர்கள் இவர்களை மடக்கி, தாக்கியதாகவும் அவர்களிடம் இருந்து போலீசார் மீட்டுள்ளதாகவும் தெரிய வந்தது.
இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில்:
கடந்த இருநாட்களுக்கு முன்னரே அவர்கள் கலோனியில் உள்ள கும்பலிடம் சிக்கிக்கொண்டுள்ளனர். அவர்களில் பலர் செல்போன்கள் வைத்திருந்தும் கூட தங்களுக்கு தெரிந்தவர்களிடம் மட்டுமே பேசியுள்ளனர். ஒருவராவது தமிழக போலீசாரிடமோ அல்லது அதிகாரிகளிடமோ தெரிவித்திருந்தால் உடனடியாக இரு மாநில அரசுகள், அதிகாரிகள் மூலம் பேசி அவர்களை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுத்திருக்கமுடியும். ஆனால் தங்கள் மீது வழக்குபதிவு செய்யப்படுகிறது என தெரிந்த பின்னரே சேனல்களுக்கு போன்மூலம் பேட்டி கொடுத்துள்ளனர்.
இதற்கிடையே போர்க்கான் போலீசார் பால்ராஜ் உள்ளிட்ட ஆண்கள் 8 பேர் மீது கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட்டதாக வழக்குபதிவு செய்து அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தியுள்ளனர். தொடர்ந்து அங்கிருக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகளை இங்கு அழைத்துவரும் முயற்சி நடந்து வருகிறது' எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications