பார்வையற்றோர் தொடர் போராட்டம்- தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தது உயர்நீதிமன்றம்

சென்னையில் கண் பார்வையற்ற பட்டதாரி மாணவர் சங்கத்தினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதை காவல்துறையினர் சற்றும் இரக்கம் இல்லாமல் அவர்களை அடித்தும், அப்புறப்படுத்தியும், காயம் ஏற்படும் வகையில் தாக்கியும் அடக்க முயல்வதாக சர்ச்சை வெடித்துள்ளது.
இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) ராஜேஷ்குமார் அக்ரவாலுக்கு, பார்வையற்ற வழக்கறிஞரான ஆர்.முகமது நசரூல்லா என்பவர் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில், கண் பார்வையற்ற பட்டதாரி மாணவர்கள் சங்கத்தின் மூத்த உறுப்பினராக உள்ளேன். கடந்த சில தினங்களாக, பார்வையற்ற பட்டதாரிகள், வேலை வாய்ப்பு உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அமைதியாக அறவழியில் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
ஆனால் அந்த மாற்றுத்திறனாளிகள் மீது போலீசார் காட்டு மிரண்டாடித்தனமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
போராட்டம் செய்பவர்கள் கண் பார்வையற்றவர்கள் என்பதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட போலீசார், போராட்டத்தில் ஈடுபடுவோரை பிடித்து வாகனத்தில் ஏற்றி, சென்னையில் இருந்து 80 கிலோ மீட்டர் தூரத்துக்கு அழைத்து சென்று அங்குள்ள சுடுகாட்டில் விட்டு விடுகின்றனர்.
இந்த சம்பவம் எல்லாம் பத்திரிகைகளில் செய்தியாக வெளியாகியுள்ளது. 23-ந் தேதி கூட பார்வையற்ற ஒரு பெண்ணை போலீசார் கொடூரமாக தாக்கியதால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனவே இந்த விவகாரத்தில் இந்த உயர்நீதிமன்றம் தலையிட்டு நீதி வழங்கவேண்டும்என்று கூறியிருந்தார்.
இதைப் பரிசீலித்த நீதிபதி ராஜேஷ் அக்ரவால், கடிதத்தையே மனுவாக ஏற்றுக்கொண்டு, தாமாக முன்வந்து பொதுநல வழக்கு பதிவு செய்தார். இந்த வழக்கில், தமிழக அரசின் தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், சமூகநலத்துறை செயலாளர் மற்றும் சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் ஆகியோரை எதிர் மனுதாரராக சேர்த்து உத்தரவிட்டார்.
இந்த பொதுநல வழக்கு தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அக்ரவால், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு சார்பில் அரசு பிளீடர் எஸ்.டி.எஸ்.மூர்த்தி ஆஜராகி, இந்த மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்டார். இதையடுத்து எதிர்மனுதாரரான தலைமை செயலாளர் உட்பட 4 பேருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை வருகிற அக்டோபர் 3-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
வேலை வாய்ப்பு இட ஒதுக்கீட்டை பின்பற்ற வீரமணி கோரிக்கை
இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக தி.க. தலைவர் வீரமணி வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில்,
சென்னையில் கடந்த 10 நாட்களுக்கு மேல், பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் தங்களுக்குள்ள வேலை வாய்ப்பு இடஒதுக்கீடு சரிவர நிரப்பப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து அறப்போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தமிழக முதல்வர், அவர்களை அழைத்து-கருணை காட்டி, அவர்களது கோரிக்கைகளைக் கேட்டு, செய்ய வாய்ப்பிருப்பவைகளை செயல்படுத்த ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications