கோர்ட்டில் ஆஜராவது பாவச்செயலா? கவுரவ பிரச்சினையா? போலீஸ் கமிஷனர் ஜார்ஜூக்கு ஹைகோர்ட் சரமாரி கேள்வி
சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜுக்கு உயர் நீதிமன்ற நீதிபதி என். கிருபாகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை: நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத சென்னை மாநகர காவல் ஆணையருக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சியின் 196வது வார்டு கவுன்சிலராக இருக்கும் அண்ணாமலை, ஈஞ்சம்பாக்கம் தேவி நகரில் உள்ள ஒரு கட்டிடத்துக்கு சொத்து வரியாக வெறும் ரூ.55ம், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஆசிரியர் காலனியில் உள்ள வீட்டிற்கு ரூ.110ம், ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகரில் உள்ள 3 வீடுகளுக்கு தலா ரூ.55ம், ஈஞ்சம்பாக்கம் பொன்னியம்மன் கோவில் தெருவில் உள்ள 2 வீடுகளுக்கு தலா ரூ.1,940ம், திருவள்ளுவர் சாலையில் உள்ள வீட்டிற்கு ரூ.110ம், சோழிங்கர், எம்.ஜி.ஆர். நகரில் உள்ள வீட்டிற்கு ரூ.3,650 என்று சொத்து வரி செலுத்தியுள்ளார்.
இதையடுத்து அண்ணாமலைக்கு எதிராக பொன்.தங்கவேலு என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை தாக்கல் செய்த தங்கவேலுவுக்கு பாதுகாப்பு வழங்கும்படி சென்னை காவல் ஆணையருக்கு நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவை அமல்படுத்தாத காவல் ஆணையருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரி தங்கவேலு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிபதி என்.கிருபாகரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. நீதிமன்ற உத்தரவு படி, மனுதாரர் பொன். தங்கவேலுவுக்கு சென்னை போலீஸ் கமிஷனர் பாதுகாப்பு கொடுக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இதை கேட்ட நீதிபதி கிருபாகரன் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ்க்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.
மேலும், காவல் ஆணையர் எப்போது ஆஜராவார் எனவும், இல்லாவிட்டால் நீதிமன்றம் உத்தரவிட வேண்டுமா என தெரிவிக்கும்படி அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞருக்கு நீதிபதி உத்தரவிட்டார். பின்னர், பொன். தங்கவேலுவுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் பதில் தெரிவித்தார்.
இதை ஏற்க மறுத்த நீதிபதி, நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டியது உங்கள் வேலை. நீதிமன்றத்தில் ஆஜராவது பாவச்செயலா. ஆஜராவது என்ன கவுரவ பிரச்சினையா, நீதிமன்ற உத்தரவுகளை அதிகாரிகள் அமல்படுத்தாததால் அரசு வழக்கறிஞர்கள் தான் பலிகடா ஆக்கப்படுகின்றனர் என கூறி மீண்டும் கண்டனம் தெரிவித்தார்.
இதையடுத்து அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர், போலீஸ் கமிஷனர் எப்போது ஆஜராக முடியும் என்பதை விளக்கம் பெற்று தெரிவிப்பதாக நீதிபதியிடம் கூறினார். இதையடுத்து, வழக்கு விசாரணையை நீதிபதி தள்ளி வைத்தார்.