பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கு: திராவிடர் விடுதலை கழகத்தினர் மீதான தே.பா. சட்டம் ரத்து!
சென்னை: சென்னையில் தபால் நிலையங்கள் மீது பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பான வழக்கில் திராவிடர் விடுதலைக் கழகத்தினர் மீது போடப்பட்ட தேசிய பாதுகாப்பு சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
இலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்வதை எதிர்த்து மயிலாப்பூர் மற்றும் மந்தைவெளி தபால் நிலையங்களில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 29-ஆம் தேதி பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன.
இந்த சம்பவம் தொடர்பாக திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த உமாபதி, ராவணன், மனோகரன் மற்றும் மாரிமுத்து ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் அனைவர் மீதும் நவம்பர் மாதம் 1-ந் தேதி தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் மீது வழக்குப் பதிவு செய்ய சென்னை மாநகர போலீஸ் ஆணையர் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து 4 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் வி.தனபாலன், ஜி.சொக்கலிங்கம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்றது.
விசாரணைக்குப் பிறகு திராவிடர் விடுதலைக் கழகத்தினர் 4 பேர் மீது பதிவு செய்யப்பட்ட தேசிய பாதுகாப்புச் சட்டத்தை ரத்து செய்து அவர்களை விடுதலை செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
உற்சாக வரவேற்பு
இதைத் தொடர்ந்து சென்னை புழல் சிறையில் இருந்து உமாபதி உள்ளிட்ட 4 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். பின்னர் 4 பேருக்கும் சென்னை ராயப்பேட்டை பகுதியில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் திராவிடர் விடுதலை கழகத்தின் தமிழக பொதுச்செயலர் விடுதலை க. ராசேந்திரன், திராவிடர் விடுதலை கழகத்தின் புதுச்சேரி தலைவர் லோகு அய்யப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.