மதுரை: அனுமதியின்றி செயல்பட்ட குழந்தைகள் காப்பகத்திற்கு சீல்- 53 குழந்தைகள் மீட்பு
மதுரை: மதுரையில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த அரசு காப்பகத்தை மூடி சீல்வைத்த அதிகாரிகள் அதிலிருந்த 53 குழந்தைகளை மீட்டுள்ளனர்.
மதுரை மேற்கு ஒன்றியம் கடச்சனேந்தல் அருகே உள்ள பொம்மி நகரில் ஆர்.கே. டிரஸ்ட் என்ற பெயரில் குழந்தைகள் காப்பகத்தை தமிழ்செல்வி என்பவர் நடத்தி வந்தார்.
இந்த காப்பகம் உரிய அனுமதி இல்லாமலும் அடிப்படை வசதிகள் இன்றியும் செயல்படுவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் வந்தன.
இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் உத்தரவின்பேரில் மாவட்ட சமூக நல அலுவலர் ஆனந்த வள்ளி, குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் விஜயலட்சமி ஆகியோர் குறிப்பிட்ட காப்பகத்துக்கு சென்று ஆய்வு நடத்தினார்.
ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு மற்றும் குழந்தைகள் நல மறுவாழ்வு மைய அதிகாரிகளும் ஆய்வில் கலந்து கொண்டனர். அப்போது உரிய அனுமதியின்றி காப்பகம் செயல்படுவது தெரிய வந்தது.
மேலும் குழந்தைகளுக்கு உரிய பாதுகாப்பு, உணவு, சுகாதாரமற்ற அறைகள் என அடிப்படை வசதிகள் எதுவும் காப்பகத்தில் செய்யப்படாமல் இருந்தது. இதனை தொடர்ந்து ஆர்.கே. டிரஸ்ட் குழந்தைகள் காப்பகத்திற்கு அதிகாரிகள் 'சீல்' வைத்தனர் அங்கிருந்த 53 குழந்தைகளையும் மீட்டனர்.
அவர்களில் 14 பேர் பெற்றோர் வசம் ஒப்படைக்கப்பட்டனர். 39 குழந்தைகள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொண்டு மையங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர். குழந்தைகள் காப்பகம் சீல்வைக்கப்பட்ட சம்பவம் மதுரை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.