காமன்வெல்த் மாநாடு நடத்த உங்களுக்கு வேற இடமா இல்லை.. மதுரை ஆதீனம் காட்டம்

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
இலங்கையில் நடத்தப் பெறும் காமன்வெல்த் மாநாட்டிற்கு எந்த ஒரு பிரதிநிதியையும் அனுப்பக்கூடாது. மாநாடு நடத்துவதற்கு இவ்வுலகில் வேறு இடமே இல்லையா? இனக்கொலையாளிகள் நாடான இலங்கையை தேர்ந்தெடுக்கலாமா? மத்திய அரசில் பட்டறிவுமிக்க பழுத்த தலைவர்கள் எவரும் இல்லையா? சிந்திப்பவர்கள் இல்லையா?
இலங்கை நமது நட்பு நாடு என இனியும் சொல்லக்கூடாது. அது நட்பு நாடு அல்ல, கசப்பு நாடு. மனித உயிர்களை வேட்டையாடும் கசாப்புக்கடை நாடு, வெறுப்பு நாடு, தமிழ் இனப்படுகொலை நாடு, மனித மிருகங்கள் நடமாடும் நாடு. எனவே மனிதத்தன்மையே இல்லாத நாடு.
இலங்கை அரசு மீது உடனே பொருளாதார தடை விதிக்க வேண்டும். காமன் வெல்த் கூட்டமைப்பில் இருந்து இலங்கையை நீக்க வேண்டும். தமிழ் இனத்தையே அழித்து விட்ட குற்றவாளிகளுக்கு இன்னமும் தண்டனை வழங்கப்பெறவில்லை. ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்ற குற்றவாளி கூண்டில் நிறுத்தி விசாரணை செய்ய வேண்டும்.
இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னர் நமது மதுரை ஆதீனத்தை நிறுவி அருளிய தமிழ் திருஞானசம்பந்த பெருமான் இலங்கைக்கு சென்று திருகோணமாமலை, திருக்கேதீச்சரம் ஆலயங்களில் தரிசனம் செய்து தேவாரம் அருளிச் செய்த நாடு இலங்கை நாடு.
எனவே தமிழர்களாகிய எங்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, நம் தமிழக முதல்வர் புரட்சித்தலைவி அவர்கள் சட்டமன்றத்தில் இயற்றியுள்ள சிறப்பு தீர்மானங்களுக்கு மரியாதை செய்து இலங்கை மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளாது என உடனே இலங்கை அரசுக்கு தெரிவித்துவிடுங்கள்.
அவ்வாறு செய்யவில்லையானால் இனப்படு கொலையில் மத்திய அரசுக்கும் பங்கு உண்டு என்றாகிவிடும். தமிழகமும், தமிழ் மக்களும் உங்கள் துரோகத்தை மன்னிக்கவே மாட்டார்கள். உலகமே உங்கள் முடிவை எதிர் பார்க்கின்றது என்பதை தெரிவித்து கொள்கிறோம் என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications