தப்பு தப்பா தகவல் கொடுத்தால் நடவடிக்கை எடுப்போம்.. நித்யானந்தாவுக்கு ஹைகோர்ட் கிளை கண்டனம்
மதுரை: நித்யானந்தாவுக்கு மதுரை ஹைகோர்ட் கிளை கண்டனத்தை தெரிிவித்துள்ளது.
மதுரை ஆதீன மடத்துக்குள் நித்யானந்தா நுழைய நிரந்தரத் தடை கோரி, ஜெகதலபிரதாபன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்தார். அந்த மனுவில், "மதுரை ஆதீனம் மடம் 2500 ஆண்டுகள் பழமையானது. இதன் 292வது ஆதீனமாக அருணகிரிநாதர் கடந்த 25 ஆண்டுகளாக இருந்து வருகிறார். 2012ல் பிடதியில் தியான பீடம் அமைத்துள்ள நித்யானந்தா ஆதீன மடத்துக்குள் நுழைய முற்பட்டார். தன்னை ஆதீன மடத்தின் 293வது மடாதிபதியாக பிரகடனப்படுத்திக் கொண்டார்" என கூறப்பட்டிருந்தது.
எனவே, மதுரை ஆதீன மடத்திற்குள் நித்யானந்தா நுழைய தடை விதிக்க மனுவில் கோரப்பட்டிருந்தது. ஜெகதலபிரதாபன் மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை, விசாரித்து வருகிறது.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. ஆதீனமாக நித்யானந்தா நியமிக்கப்பட்டுள்ளதால் அவர் தான் நிரந்தரமாக தொடருவார் என நித்யானந்தா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதைக் கேட்ட நீதிபதி, 292வது ஆதீனம் உயிருடன் இருக்கும் போது, 293வதாக ஆதீனம் என ஒருவர் கூறுவது சரியாக இல்லையே. நீதிமன்றத்திற்கு தவறான தகவல் தந்ததற்காக நித்யானந்தா மீது ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது? என்று கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து, வழக்கு விசாரணை, நவம்பர் 13ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.