போராட்டத்தை திரும்ப பெறாத மருத்துவர்கள் சங்கங்கள் மீது நடவடிக்கை எடுங்க - ஹைகோர்ட் ஆணை
போராட்டத்தை திரும்பப்பெறாத மருத்துவர் சங்கங்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.
சென்னை: போராட்டத்தை திரும்பப்பெறாத மருத்துவர் சங்கங்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அங்கீகரிக்கப்படாத சங்கங்கள் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.
நீட் தேர்வினை ரத்து செய்ய வேண்டும், முதுநிலை பட்டப்படிப்பில் 50 சதவிகித இட ஒதுக்கீடு போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவர்களும், மருத்துவ மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதன்காரணமாக, தமிழகம் முழுவதும் நோயாளிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
போராட்டம் நடத்திய மருத்துவ சங்கப் பிரதிநிதிகள் உடன், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன்பேரில், அரசு மருத்துவ சங்கத்தினர் போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்தனர்.
இதேபோன்று, கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவர்கள், மாணவர்களும் போராட்டத்தை விலக்கிக் கொண்டனர். ஆனால், இதர மருத்துவ சங்கங்கள் தொடர்ந்து போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், தொடர் போராட்டம் நடத்தும் மருத்துவ சங்கங்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே, போராட்டம் நடத்தும் மருத்துவ ஊழியர் சங்கத்தினர் மீது எஸ்மா சட்டம் பிரயோகிக்கும்படி உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.