செங்கல்பட்டு அருகே 4 பேருந்துகள் அடுத்தடுத்து மோதி விபத்து- பெண் பலி, 50 பேர் காயம்
செங்கல்பட்டு அருகே புறவழிச்சாலையில் 4 அரசுப் பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரு பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்
செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே புறவழிச்சாலையில் 4 அரசுப் பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதில் ஒரு பெண் உயிரிழந்தார். 50 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். சென்னை - செங்கல்பட்டு இடையே போக்குவரத்து முடங்கியது.
ஆயுதபூஜை, காந்தி ஜெயந்தி உள்ளிட்ட தொடர் அரசு விடுமுறையால் சொந்த ஊருக்கு செல்ல பலர் நேற்று மதியம் முதலே கோயம்பேடு பேருந்து நிலையத்தில் குவிய தொடங்கினர். விடுமுறை கால கூட்டத்தை சமாளிக்க அரசு சார்பில் 700 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.
அரசு சார்பில் இன்று காலை முதல் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. பயணிகள் கிடைக்கும் பேருந்துகளில் ஏறி சொந்த ஊருக்கு சென்று வருகின்றனர்.
4 நாட்கள் தொடர் விடுமுறை அடுத்து சென்னையில் சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கோயம்பேடு, மதுரவாயல், அரும்பாக்கம், திருமங்கலம், அண்ணா நகர் ஆகிய இடங்களில் நெரிசல் ஏற்பட்டது. கோயம்பேட்டிலிருந்து பல பேருந்துகள் வெளியூருக்குச் செல்லும் நிலையில் நெரிசல் ஏற்பட்டது.
வெளியூர் செல்லும் பயணிகளால் 100 அடி சாலை, பூந்த மல்லிசாலை, ஜி.எஸ்.டி சாலையில் போக்குவரத்து அதிகரித்து காணப்படும். போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக பஸ் ஸ்டாண்ட், விமான நிலையம் செல்பவர்கள் முன்னதாகவே செல்ல வேண்டும் போலீசார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினர்.
நேற்று மாலை செங்கல்பட்டு புறவழிச் சாலையில் சென்ற அரசு பேருந்துகள் திடீரென ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டன. இந்த விபத்தில் ஒரு பேருந்து கவிழ்ந்து விழுந்தது. இதில் சிக்கி ஒரு பெண் பலியானார். மேலும், பேருந்துகள் அடுத்தடுத்து மோதி கொண்டதால் 50 பேர் காயம் காயமடைந்தனர். இந்த விபத்தால் செங்கல்பட்டு புறவழிச் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தகவலறிந்து வந்த போக்குவரத்து போலீசார் விபத்து நடந்த இடத்துக்கு விரைந்து சென்றனர். காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் முதலுதவி சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பின்னர் போக்குவரத்து நெரிசலை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டனர்.