சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை அருகே கடத்தப்பட்ட ஆண் குழந்தையை உடனே மீட்ட சென்னை போலீஸ்
சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை அருகே ஆண் குழந்தை கடத்தப்பட்டுள்ளது.
சென்னை: சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை அருகே சாலையோரம் பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்தபோது கடத்தப்பட்ட ஒரு வயது குழந்தையை போலீஸார் குறுகிய காலத்தில் மீட்டனர்.
இரவு நேரங்களில் குழந்தை கடத்தலில் ஈடுபடும் கும்பல் குறித்து போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது அங்குள்ள சிசிடிவி காட்சிகளில் இரு பெண்கள் குழந்தை அகிலனை தூக்கிக் கொண்டு ஆட்டோவில் சென்றது தெரியவந்தது.
அந்த ஆட்டோ டிரைவரை விசாரித்த போது இரு பெண்களையும் அடையாறு பணிமனையில் இறக்கிவிட்டதாக கூறினார். இதைவைத்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் பணிமனை வளாக சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தனர்.
அப்போது இரு பெண்களும் குழந்தையுடன் கண்ணகி நகர் செல்லும் பேருந்தில் சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் கண்ணகி நகர் சென்று சோதனை நடத்தி சபியா என்ற பெண்ணை கைது செய்து அவரிடம் இருந்த குழந்தை அகிலனை மீட்டனர்.
இந்த கடத்தல் சம்பவத்தில் மேலும் இருவரை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.