பேஸ்புக் மூலம் இளம்பெண்ணை ஏமாற்றி மிரட்டல் விடுத்த 'கல்யாண மன்னன்' கைது
இளம்பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்ததுடன், போடோக்களை வைத்து மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.
திருவேற்காடு: பேஸ்புக்கில் பழகி இளம்பெண்களை காதல் மன்னன்கள் ஏமாற்றும் சம்பவங்கள் குறித்து பல செய்திகள் வெளிவந்தாலும் இளம்பெண்கள் இன்னமும் ஏமாந்து தங்கள் வாழ்க்கையை நாசமாக்கி கொண்டுவருவது வேதனை அளிக்கிறது. இதோ இது தொடர்பாக புதிய சம்பவம் ஒன்று நேற்று திருவேற்காட்டில் நடந்துள்ளது.
திருவேற்காடு பகுதியை சேர்ந்த கவிதா 24, (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். பணிமுடிந்தவுடன் தினமும் பேஸ்புக், வாட்ஸ் அப் போன்றவற்றில் பெருமளவு நேரத்தை செலவிட்டு கொண்டு இருப்பதையே வழக்கமாக வைத்திருந்து உள்ளார்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த வேலு என்பவருடன் பேஸ்புக் மூலம் கவிதாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. 53 வயதான வேலு கட்டிட ஒப்பந்ததாரராக வேலை செய்து வந்தார். அத்துடன் இவருக்கு திருமணமாகி மனைவி, குழந்தைகள் உள்ளனராம். திருமணமானதை மறைத்து கவிதாவுடன் பழகியுள்ளார்.
இதற்காக அவரது பேஸ்புக்கில் தனது சுயவிவரத்தையும் மறைத்துள்ளதுடன், வயதையும் மறைத்து தன்னை இளமையாக காட்டிக் கொள்ள இளமைப்பருவ புகைப்படத்தையும் பதிவிட்டு வைத்திருக்கிறார். நண்பர்களாக பழகி தொடங்கிய இருவரும், பார்க்காமலேயே ஒருவரையொருவர் விரும்ப தொடங்கியுள்ளனர்.

கட்டாய திருமணம்
இந்நிலையில் கடந்த 24-ம் தேதி, நேரில் சந்திக்க ஆசையாக இருப்பதாக கூறி கவிதாவை வரவழைத்துள்ளார். கவிதாவும் பல பல கனவுகளுடன் வேலுவை சந்திக்க வந்தார். ஆனால் தனக்கு அப்பா போல வயதில் இருந்த வேலுவை கண்டதும் அதிர்ச்சியடைந்தார். ஆனால் வேலு என்னென்னவோ ஆசைவார்த்தைகள் பல கூறி கவிதாவை விருப்பமில்லாமல் கட்டாய திருமணம் செய்து கொண்டு அழைத்து சென்று விட்டார். அந்த நேரங்களில் கவிதாவுடன் நெருக்கமாக இருந்தபோது வேலு போட்டோக்களை எடுத்து மறைத்து வைத்திருந்திருக்கிறார்.

மிரட்டல் விடுத்த வேலு
ஆனால் இது தெரியாத கவிதா வேலுவிடமிருந்து தப்பி ஓடிவந்து பெற்றோரிடம் கதறி கதறி அழுதுள்ளார். பெற்றோர் வேலுமீது போலீசில் புகார் அளித்ததை தொடர்ந்து அவரை கைது செய்து சிறையிலடைத்தனர். பிரச்சனை இதோடு ஓயவில்லை. கடந்த சில வாரங்களுக்கு முன் சிறையிலிருந்து வெளியே வேலு தன் வேலையை காட்டத் தொடங்கினார். நேராக கவிதா வீட்டுக்கு சென்ற வேலு, தன்னுடன் மரியாதையாக குடும்பம் நடத்த வரவில்லை என்றால், கொலை செய்துவிடுவதாக மிரட்டினார். மேலும் கவிதாவுடன் நெருக்கமாக எடுத்து வைத்திருந்த போட்டோக்களை "வாட்ஸ் அப்" மற்றும் "பேஸ்புக்" போன்ற சமூக வலைதளங்களில் போட்டு மிரட்டியுள்ளார்.

மீண்டும் கம்பி எண்ணும் வேலு
இதனை சற்றும் எதிர்பாராத கவிதா, அதிர்ச்சியடைந்து கடும் மன உளைச்சலுக்கு ஆளானார். எனவே இதுகுறித்துஉடனடியாக திருவேற்காடு போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து வேலு மீது கொலை வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை அழைத்து விசாரணை செய்தனர். அதில் சமூக வலைதளத்தில் கவிதாவினுடைய போட்டோவை போட்டு மிரட்டியதை வேலு ஒப்புக்கொண்டார். இதையடுத்து மீண்டும் போலீசார் கைது செய்ததன் அடிப்படையில் வேலு கம்பி எண்ணிக் கொண்டு இருக்கிறார்.

பெருகும் களவாணித்தனங்கள்
சமூகவலைதளங்களில் எவ்வளவோ பல நல்ல விஷயங்கள் இருந்தாலும் களவாணித்தனங்களும் பெருகி போய்விட்டதையும் மறுக்க முடியவில்லை. ஒரு ஆண் தன்னை பெண்ணாகவும், வயது முதிர்ந்த கிழடுகள் எல்லாம் சபலபுத்தியை பயன்படுத்தி இளம் பெண்களை சீரழிப்பதும் தொடர்ந்து நடைபெற்று வருவது வேதனையளிக்கிறது. முக்கியமாக பேஸ்புக்கில் தலைவிரித்தாடும் இதுபோன்ற அவலங்களை பார்த்தாவது இளம்பெண்கள் தங்களை பக்குவப்படுத்தி கொண்டு, இனியாவது அதனை எச்சரிக்கையாக கையாள தொடங்க வேண்டும்.












Click it and Unblock the Notifications