''நீங்க வெறும் தாஸா, இல்லை லார்டு லபக் தாஸா'... அவசர எண்களுக்கு போன் செய்து அலப்பறை கொடுத்தவர் கைது
திருப்பூர்: திருப்பூரில் உள்ள அவசரப் பிரிவு தொலைபேசி எண்களுக்கு தினமும் தொடர்பு கொண்டு தொல்லை கொடுத்து வந்த பீமன் என்பவரை அவிநாசி போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த இரண்டு மாதங்களாக திருப்பூர் மாவட்டத்தில் உள்ள போலிசாரின் அவசரப்பிரிவு எண்-100, தீயணைப்பு துறை-101, போன்ற அவசரப் பிரிவு தொலைபேசி எண்களுக்கு தினமும் ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் அங்கு பணியில் இருக்கும் ஊழியர்களை தகாத வார்த்தைகளால் திட்டி வந்துள்ளார். இதனால், அந்த ஊழியர்களின் அலுவலகப் பணி பாதிப்படைந்துள்ளது.
இது தொடர்பாக மருத்துவம், போலீஸ் மற்றும் தீயணைப்புத்துறை என அனைத்து துறைகளின் அவசரப் பிரிவுகளில் இருந்தும் போலீசுக்கு புகார் வந்துள்ளது. புகாரையடுத்து மர்ம நபர் அழைக்கும் தொலைபேசி எண்ணை கண்டறிய முடிவு செய்தது போலீஸ். அதன்படி, சம்பந்தப்பட்ட இடங்களில் காலர் ஐ.டி கருவியை பொருத்தினர்.
காலர் ஐ.டி.யில் கண்டறியப்பட்ட எண்கள் எல்லாமே திருப்பூர் சுற்றுப்பகுதியில் உள்ள போது தொலைபேசியின் எண்களாகவே இருந்ததால், மர்மநபர் அப்பகுதியில் வாழ்பவராக இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர்.
மேற்கொண்டு போலீசார் நடத்திய விசாரணையில், அந்த மர்ம நபர் அன்னூர், சோமனூர் பிரிவைச் சேர்ந்த கண்ணு என்பவரது மகன் பீமன் (வயது-32) என்பதும், அவர் கட்டட வேலை செய்துவருபவர் என்பதும் கண்டுபிடிக்கப் பட்டது.
அதனைத் தொடர்ந்து பீமனைக் கைது செய்த அவிநாசி காவல் துறையினர், அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications