கோவை திவிக பரூக் கொலை.. மேலும் ஒருவர் சரண்
கோவியில் திராவிடர் விடுதலை கழகத்தைச் சேர்ந்த பரூக் படுகொலையில் மேலும் ஒருவர் சரணடைந்துள்ளார்.
கோவை: கோவையில் திராவிட விடுதலை கழகத்தை சேர்ந்த பரூக் படுகொலை தொடர்பாக போத்தனூர் சதாம் உசேன் என்பவர் சரணடைந்துள்ளார்.
கோவை உக்கடம் ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்தவர் பரூக். 31 வயதான இவர் உக்கடம் பழைய இரும்பு சந்தையில் வியாபாரம் செய்து வந்தார்.
கடந்த வியாழக்கிழமை பரூக்கை செல்போனில் அழைத்த மர்ம நபர் ஒருவர் தொழில் சம்மந்தமாக பேச வேண்டுமென, உக்கடம் பகுதியில் உள்ள மாநகராட்சி கழிவுநீர் பண்ணை அருகே வருமாறு கூறியுள்ளார்.
படுகொலை
இதனையடுத்து தனது இரு சக்கர வாகனத்தில் அப்பகுதிக்கு சென்ற பரூக்கை ஏற்கனவே அங்கு காத்திருந்த மர்ம நபர்கள் திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களால் தாக்கி படுகொலை செய்தனர்.
ரத்த வெள்ளம்
ரத்த வெள்ளத்தில் மிதந்த பரூக் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, தகவல் அறிந்து வந்த கடைவீதி காவல்துறையினர், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
ஒருவர் சரண்
இதனிடையே, போத்தனூர் பகுதியை சேர்ந்த அன்சாத் என்பவர் கோவை 5 வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இவரை வருகின்ற 28 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிபதி செல்வகுமார் உத்தரவிட்டார்.
மேலும் ஒருவர் சரண்
இதனைத் தொடர்ந்து இன்று அதே போத்தனூரைச் சேர்ந்த சதாம் உசேன் என்பவர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். இதனிடையே இஸ்லாமிய அமைப்புகள் பரூக் படுகொலைக்கு கண்டனங்களைத் தெரிவித்துள்ளன.