தங்க மாரியப்பன் சொந்த ஊருக்கு வந்தார் ... தாரை தப்பட்டை முழங்க வரவேற்பு
சென்னை: பாரா ஒலிம்பிக்கில் நீளம் தாண்டும் போட்டியில் தங்கம் வென்ற மாரியப்பனுக்கு அவரது சொந்த மாவட்டமான சேலத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சொந்த ஊருக்கு வந்த மாரியப்பனுக்கு பட்டாசுகள் வெடித்தும் தாரை தப்பட்டை முழங்க வரவேற்பு அளித்தனர்.
ரியோவில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக்கில் நீளம் தாண்டும் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு இந்தியாவின் சார்பில் பங்குபெற்றார். இந்த போட்டியில் அவர் தங்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தார்.

பிரேசிலில் இருந்து புதன்கிழமை மாரியப்பன் டெல்லி வந்தார். பிரதமர் மோடியை சந்தித்து மாரியப்பன் வாழ்த்து பெற்றார். நேற்று சென்னை வந்த மாரியப்பனை தமிழக அமைச்சர்கள் வரவேற்றனர். விளையாட்டு துறை அமைச்சர் மாஃபா பாண்டியன் நேரில் சென்று வரவேற்று வாழ்த்தினார்.
மாரியப்பபன் இன்று தனது சொந்த மாவட்டமான சேலத்திற்கு வந்தார். சேலத்திலுள்ள தொப்பூலூரில் மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து வரவேற்பளித்தார். இதனையடுத்து தனது சொந்த ஊரான பெரிய வடக்கன் பட்டிக்கு மாரியப்பன் சென்றார். அங்கு அவரை வரவேற்பதற்காக பிரண்மாண்ட விழாவை அந்த ஊர் மக்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ஊர் மக்கள் மேளதாளம் முழங்க மாரியப்பனை வரவேற்றனர்.

தொப்பூரில் இருந்து சொந்த ஊரான தீவட்டிப்பட்டிக்கு 7 கிலோ மீட்டர். எல்லையான தொப்பூரில் இருந்தே மாரியப்பனுக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது. திறந்த வேன் மீது மாரியப்பனையும் அவரது அம்மாவையும் அமரவைத்து சொந்த ஊரான பெரியவடக்கன்பட்டிக்கு அழைத்துச் சென்றனர். பட்டாசுகளை வெடித்தும் தாரை தப்பட்டை முழங்க வரவேற்றனர். வழி நெடுகிலும் குடும்பத்தினர், உறவினர்கள் மாரியப்பனை வரவேற்றனர்.












Click it and Unblock the Notifications