8 வழிச்சாலையை எதிர்த்து நடைப்பயணம்.. திருவண்ணாமலையில் மார்க்சிஸ்ட் கட்சியினர் 2000 பேர் கைது
8 வழிச்சாலைக்கு எதிர்த்து தடையை மீறி நடைபயணம் மேற்கொண்ட மார்க்சிஸ்ட் கட்சியினர் 2000 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
Recommended Video

திருவண்ணாமலை: 8 வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திருவண்ணாமலையில் தடையை மீறி நடைபயணம் மேற்கொண்டதால் 2000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டத்தால், ஆயிரம் ஏக்கருக்கு மேலான காடுகள், விளைநிலங்கள் அழிக்கப்படும் என்பதால் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் கட்சியினர், விவசாயிகள், பொதுமக்கள் போராடி வருகின்றனர். மேலும், 8 வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபடுபவர்களை போலீஸார் கைது செய்து வருகின்றனர்.

இந்நிலையில், 8 வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து 'என் நிலம், என் உரிமை' என்ற பெயரில் திருவண்ணாமலையில் இருந்து சேலம் வரை இன்று புதன்கிழமை நடைபயணம் மேற்கொள்ளப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்தது. இதற்கு போலீஸார் நேற்று அனுமதி மறுத்து நடைபயணத்துக்கு தடை விதித்தனர்.
நடைபயணத்துக்கு போலீஸ் அனுமதி மறுத்தாலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தடையை மீறி 8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிரான நடைபயணம் நடக்கும் என்று அறிவித்தது.
இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்யினர் மற்றும் பொதுமக்கள் திருவண்ணாமலை அண்ணா சிலை அருகில் 8 வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து 2000க்கும் மேற்பட்டோர் நடைபயணத்துக்காக திரண்டனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சிவக்குமார் தலைமையில் தடையை மீறி நடைபயணத்தை தொடங்க இருந்தனர். இந்த நடைபயணத்துக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். நடைபயணம் தொடங்கியதுமே போலீஸார் நடைபயணத்தில் ஈடுபட்ட 2000 பேரை கைது செய்தனர்.
மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் தடையை மீறி நடைபயணம் நடைபெறும் என்று நேற்றே அறிவித்தனர். இந்த போராட்டத்தில் பொதுமக்கள் 2000க்கும் மேற்பட்டோர் கலந்துகொள்வார்கள் என்று தெரிந்தும் போலீஸார் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக இருந்துள்ளனர். இதனால், கைது செய்யப்பட்டவர்களை சிறைவைப்பதற்கு போலீஸார் திருமண மண்டபங்களை தேடி அலைந்து கொண்டிருக்கின்றனர். அதுமட்டுமில்லாமல், ஒரு வாகனத்தில் கைது செய்யப்பட்டவர்களை அழைத்துச்சென்று ஓயாமடம் அருகில் உள்ள மண்டபத்தில் தங்கவைத்துள்ளனர். அங்கே காற்றோட்டம் இல்லாத பகுதி என்பதால் கைதானவர்கள் அந்த மண்டபத்தில் இருப்பதற்கு மறுப்பு தெரிவித்து போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பெரிய அளவில் மக்கள் கைதாகியுள்ளதால் சிறைவைப்பதற்கு போலீஸார் சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்த நடைப்பயண போராட்டம் குறித்து மார்க்சிஸ்ட் கட்சியினர் கூறுகையில், போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நாங்கள் எப்போது விடுவிக்கப்பட்டாலும் 8 வழிச்சாலைக்கு எதிரான நடைப்பயண போராட்டத்தை நடத்துவோம் என்று எச்சரிக்கை தெரிவித்தனர்.
மேலும், இந்த நடைபயணப் போராட்டத்தில் தமுஎகச துணை பொதுச் செயலாளர் எஸ்.கருணா, துணை செயலாளர் சுந்தரவள்ளி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.












Click it and Unblock the Notifications