மாசி மகம்: கும்பகோணம், மகாபலிபுரத்தில் பக்தர்கள் புனித நீராடல்
சென்னை: மாசி மகத்தை முன்னிட்டு இன்று கும்பகோணம் மகாமக குளத்தில் ஏராளமானோர் புனித நீராடினர். மாமல்லபுரத்தில் நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று புனித நீராடினர்.
கும்ப ராசியில் சூரியன் இருக்கும் போது சந்திரன் சிம்ம ராசியில் மக நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வார். இந்நாளே மாசி பவுர்ணமியுடன் கூடிய மாசி மகமாக திகழ்கிறது.
மாசி மகம். மகாவிஷ்ணு, உமாமகேஸ்வரன், முருகன் ஆகிய 3 தெய்வங்களுக்கும் உகந்த நாள் மாசி மகம். உமா தேவியார் மாசி மாதம் மக நட்சத்திரத்தில்தான் தட்சணின் மகள் தாட்சாயணியாக அவதரித்தார் என்பதால் மிகவும் புண்ணிய நாளாக கருதப்படு கிறது.
மாசி மகத்தில் புண்ணிய தீர்த்தங்களைத் தரிசிப்பதும் தொடுவதும் பருகுவதும் அதில் நீராடுவதும் புண்ணியத்தைத் தரும்; பாவங்கள் தொலையும். இத்தினத் தில் தீர்த்தக் கரைகளில் தர்ப்பணம், பிதுர்க்கடன் ஆகியவை செய்தால், அவர்கள் பாவங்கள் நீங்கி நற்கதி பெறுவர் என்பது நம்பிக்கை.

தீர்த்தமாடும் நாள்
பிறவிப் பெருங்கடலில் வீழ்ந்து துன்பக் கடலில் இருக்கும் ஆன்மா, இறைவனது அருட்கடலை வேண்டும் நாளே மாசி மகத்தின் சிறப்பு. இந்த நாளை ‘கடலாடும் நாள்‘ என்றும் ‘தீர்த்தமாடும் நாள்‘ என்றும் சொல்வார்கள். புண்ணிய இடங்களில் தீர்த்தமாட முடியாதவர்கள் விரதம் இருந்து கோயிலுக்கு சென்று உமாமகேஸ்வரனை தரிசிப்பர்.

கும்பகோணத்தில் மாசிமகம்
தமிழகத்தை பொறுத்தவரை கும்பகோணத்தில் மாசி மகம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. வடஇந்தியாவில் கும்பமேளா என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள். பிற ஸ்தலங்களில் செய்த பாவம் காசியில் தீரும். காசியில் செய்த பாவம் கும்பகோணத்தில் நீங்கும் என்பதே கும்பகோணத்தின் சிறப்பு.

மகாமகம்
ஆண்டுதோறும் மாசி மகம் வந்தாலும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குருபகவான் சிம்ம ராசியில் இருக்கும்போது வருவது மகா மகமாகும். அன்றைய தினம் பல லட்சம் பேர் மகாமக குளத்தில் நீராடுவர்.

திருச்செந்தூரில் மாசிமகம்
திருச்செந்தூரில் மாசி மகம் மிகவும் பிரசித்தி பெற்றது. கடற்கரையில் முருகப் பெருமான் எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெற்றது. கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள், திரு ப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் என ஈசனும், பெருமாளும் ஒன்றுகூடி எழுந்தருளி அருள்பாலித்தனர்.

சென்னையில் மாசி மகம்
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் மெரினா கடற்கரையில் எழுந்தருளி அருளாசி வழங்கினார். அதேபோல மயிலாப்பூரில் உள்ள மாதவ பெருமாள், கபாலீஸ்வரர், காரணீஸ்வரர், விருப்பாக்ஷீஸ்வரர்,அப்பர் சுவாமிகள், வெள்ளீஸ்வரர்,வாலீஸ்வரர் ஆகிய சிவ ஆலயங்களில் இருந்து உற்சவ மூர்த்திகள் கடற்கரையில் எழுந்தருளினர். தீர்த்தவாரி நடைபெற்ற பின்னர் ஏராளமானோர் கடலில் நீராடினர்.

மகாபலிபுரத்தில் நீராடல்
மாமல்லபுரம் ஸ்தல சயனப் பெருமாள் ஆலயம் அர்த்த சேது என்று அழைக்கப்படுகிறது. இத்தலத்தில் கடல் நீராடி பெருமாளையும் பிராட்டியையும் தரிசிப்பவர்களுக்கு திருமண பாக்கியம், நன்மக்கட்பேறு போன்ற பலன்கள் கிட்டும். மாசி மகத்தை ஒட்டி இங்கு தீர்த்தவாரி நடைபெற்றது. ஏராளமானோர் பெருமாளை தரிசித்து கடலில் நீராடினர்.

குலதெய்வ வழிபாடு
மாசி மகம் பல்வேறு சிறப்புக்களை கொண்டது. இந்நாளில் மாணவர்கள் தங்கள் இஷ்ட தெய்வங்களை, குலதெய்வங்களை வணங்கி பாடங்களை படித்தால் அறிவு விருத்தியாகும். மந்திர உபதேசம் பெறுவதும் மிகவும் சிறப்பாகும். கல்வி தொடர்பான செயல்களை தொடங்க வேண்டும் என்றால் மாசி மகத்தில் தொடங்குவது நன்று.

இறைவழிபாடு
மகத்திற்கு அழிவே இல்லை. அதுவும் மாசிமகம் இன்னும் சக்தி படைத்தது. அதனால் தாட்சாயினியாக அம்மன் மக நட்சத்திரத்தில் தோன்றிய பிறகுதான் சக்தி பீடங்கள் உருவாகி உலகநாயகியாக போற்றப்படுகிறார் அன்னை சக்திதேவி. மாசிமகம் அன்று சிவபெருமானையும், ஸ்ரீவிஷ்ணுபகவானையும் பித்ருக்களையும் வணங்கினால் சகலநலன்களையும் பெற்று வளமான வாழ்க்கை அமையும்.!












Click it and Unblock the Notifications