பட்டு வேட்டி கட்டி.. மதுரை மீனாட்சியை பயபக்தியுடன் தரிசித்த மாத்யூ ஹெய்டன்!
மதுரை: முன்னாள் ஆஸ்திரேலிய அதிரடி பேட்ஸ்மேன் மாத்யூ ஹெய்டன் இன்று மதுரை வந்தார். மதுரை வந்த அவர் மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்று பயபக்தியுடன் சாமி கும்பிட்டார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரராக பல காலமாக வலம் வந்தவர் ஹெய்டன். ஆஸ்திரேலியா அணியின் அட்டகாசமான அதிரடி தொடக்க ஆட்டக்காரரும் கூட.
இந்த நிலையில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தால் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் புரமோஷனுக்காக ஹெய்டன் அழைக்கப்பட்டுள்ளார். அதைத் தொடர்ந்து ஹெய்டன் தமிழகம் வந்துள்ளார். சென்னையில் அவர் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இன்று அவர் மதுரை வந்தார்.
மீனாட்சி அம்மன் கோவில்
இன்று பிற்பகல் வாக்கில் மதுரை வந்த அவர் மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்றார். அங்கு பயபக்தியுடன் சாமி கும்பிட்டார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. கோவிலைப் பார்த்து வியப்பு தெரிவித்தார் ஹெய்டன்.
பத்திரிகையாளர்கள் சந்திப்பு
கோவில் விஜயத்தை முடித்துக் கொண்ட பின்னர் ஹோட்டலுக்குத் திரும்பினார் ஹெய்டன். ஓய்வுக்குப் பின்னர் அவர் தெப்பக்குளம் தியாகராஜர் கல்லூரிக்குச் செல்கிறார். அங்கு 3 மணி வரை நிகழ்ச்சியில் பங்கேற்கும் அவர் அதை முடித்துக் கொண்டு 4 மணிக்கு வேலம்மாள் கல்லூரிக்குப் போகிறார்.
மதுரை கிரிக்கெட் சங்கத்திற்கு விஜயம்
வேலம்மாள் கல்லூரி நிகழ்ச்சியை முடித்த பின்னர் மாலை 6 மணிக்கு மதுரை மாவட்ட கிரிக்கெட் சங்கத்திற்கு விஜயம் செய்கிறார். அங்கு நிர்வாகிகளைச் சந்திக்கிறார்.
விஷால் மாலில் கலந்துரையாடல்
பிறகு 7.30 மணிக்கு விஷால் தி மாலுக்குச் செல்லும் மாத்யூ ஹெய்டன் அங்கு நடைபெறும் டாக்ஷோவில் கலந்து கொண்டு பேசுகிறார். 8 மணிக்கு அவரது மதுரை நிகழ்ச்சிகள் முடிவடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.