தருமபுரம் ஆதீனத்தை பல்லக்கில் தூக்கிச் செல்ல தடை.. திராவிடர் கழகம் எதிர்த்த நிலையில் அரசு அதிரடி
மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதீனத்தில் பாரம்பரியமாக நடைபெறும் பட்டினப்பிரவேச விழாவில் ஆதீனத்தை பல்லக்கில் தூக்கிச்செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை: தருமபுரம் ஆதினம் குருமகா சன்னிதானத்தை பல்லக்கில் அமர வைத்து தூக்கி செல்ல தடை விதித்து, மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி உத்தரவிட்டார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் தருமபுரம் ஆதீன மடம் செயல்பட்டு வருகிறது. . பழமையான சைவ ஆதீனமாக விளங்கும் அந்த ஆதீனத்தின் ஆதீனகர்த்தராக இருந்தா ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் 4 ம் தேதி காலமானார்.

அதனை தொடர்ந்து ஆதீனத்தின் 27 வது ஆதீனகர்த்தராக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அதே ஆண்டு டிசம்பர் 13 ம் ஆதீனகர்த்தராக பதவியேற்று ஞானபீடத்தில் அமர்ந்தார்.
அன்றைய தினமே தருமபுரத்தில் ஏற்பாடு மனிதனை மனிதர்களே தூக்கும் பட்டி பிரவேச நிகழச்சி நடந்தது, வெள்ளிப் பல்லக்கில் புதிய ஆதீனகர்த்தர் அமரந்து வீதி உலாவந்தார். அந்த பல்லக்கை அதற்காக ஆதீனத்தில் உள்ள அடிதட்டு மக்கள் சுமந்து வந்தார்கள்.
அந்த நிகழ்வை தொடர்ந்து டிசம்பர் 24 ம் தேதி தருமை ஆதீனத்திற்கு சொந்தமான வைத்தீஸ்வரன்கோயில் வைத்தியநாதசுவாமி கோயிலுக்கு சென்றவரை, அங்கும் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டு, வெள்ளி பல்லக்கில் அமரசெய்து பட்டினப் பிரவேசம் செய்யவைத்தனர். அதே போலவே காரைக்கால் திருநள்ளார் சனிபகவான் கோயிலிலும் நடைபெற்றது.
இதற்கு திராவிடர் கழகம் எதிர்ப்பு தெரிவித்தது. இதுதொடர்பாக திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி கடந்த 2020ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில், " தருமபுர மடத்துக்குப் புதிய ஆதீனகர்த்தராகப் பதவி ஏற்றுள்ள தவத்திரு மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் நீண்ட காலத்துக்கு முன்பே தடை செய்யப்பட்ட - மனிதர்கள் தூக்கும் பல்லக்கில் பவனி வரும் பட்டினப்பிரவேசம் என்னும் 'மனித உரிமையைச் சிறுமைப்படுத்தும் நிகழ்ச்சியைப் புதுப்பித்து வருகிறார்' என்ற தகவல் நமக்குக் கிடைத்துள்ளது"என்று தெரிவித்தார்.
திராவிட சந்நிதானங்கள் மீது நமக்கு மதிப்புண்டு என்ற போதிலும் கூட, பல்லாண்டுகளுக்கு முன்பே இதே தருமபுர ஆதீனத்தில் நடைமுறையில் இருந்த மனிதர்கள் சுமக்கும் பட்டினப் பிரவேசத்தைத் தடுப்பது என்று திராவிடர் கழகம் முடிவு செய்தபோது, தவத்திரு குன்றக்குடி அடிகளார் தலையீட்டின் பேரில், கடைசி நேரமானதால் அந்த ஆண்டு மட்டும் நடைபெற்று - அதற்குப்பின் அது நிறுத்தப்பட்டது. பிறகு திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் பட்டினப்பிரவேசத்தை நடத்திய போது திராவிடர் கழகத்தின் சார்பில் மறியல் செய்யப் பட்டது, பிறகு நிறுத்தப்பட்டு விட்டது என்ற தகவலையும் கி.வீரமணி குறிப்பிட்டிருந்தார்.
தந்தை பெரியார் கூறிய கருத்தினை ஏற்று சங்கராச்சாரியாரும் கூட, மனிதர்கள் சுமக்கும் பல்லக்கில் செல்வதைத் தவிர்த்தார் என்பது வரலாறு. மனிதர்கள் சுமக்கும் பட்டினப் பிரவேசத்தைக் கைவிட வேண்டும்" என்று தெரிவித்த வீரமணி, நியாயமான இந்த வேண்டுகோள் புறக்கணிக்கப் படுமேயானால், பட்டினப் பிரவேசத்தை எதிர்த்து திராவிடர் கழகத்தின் சார்பில் மறியல் செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
ஆதீனத்தை பல்லக்கில் தூக்கி செல்வதற்கு திராவிடர் கழகம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மனிதனை மனிதனே சுமப்பது மனித உரிமைக்கு எதிரானது என்று திராவிடர் கழகம் கூறி எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த வாய்ப்பு உள்ளது என்பதாலும் இந்த நிலையில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதாலும் தருமபுரம் ஆதீனம் குருமகாசன்னிதானத்தை பல்லக்கில் அமர வைத்து தூக்கி செல்வதற்கு தடை விதித்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications