மாரத்தான் ஓட்டமெடுக்கும் நிர்வாகிகள்... பரபரப்பான சூழ்நிலையில் மதிமுக உயர்நிலைக்குழு கூட்டம்
சென்னை: மதிமுகவிலிருந்து அடுத்தடுத்து மாவட்டச் செயலாளர்களும், நிர்வாகிகளும் ஓட்டம் பிடித்து வரும் நிலையில் அக்கட்சியின் உயர்நிலைக்குழு கூட்டம் பரபரப்பாக தொடங்கியுள்ளது. தாயகத்தில் அவைத்தலைவர் துரைசாமி தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மல்லை சத்யா உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.
மதிமுகவில் இருந்து 3 மாவட்ட செயலாளர்கள், 2 தலைமைக்கழக நிர்வாகிகள் என ஒரே வாரத்தில் முக்கிய நிர்வாகிகள் விலகியுள்ளனர். இதில் சிலர் திமுகவில் இணைந்துள்ளனர். இது மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்குப் பின்னணியில் திமுக இருப்பதாக வைகோ குற்றம் சாட்டி வருகிறார். இந்த நிலையில் திமுக கூட்டணியில் ஏன் சேரக் கூடாது' என்பது பற்றி இன்றைய மதிமுக உயர்நிலைக்குழு கூட்டத்தில் வைகோ விளக்குவதோடு நிர்வாகிகளை சமாதானப்படுத்தும் வகையில் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2016 சட்டசபைத் தேர்தலில் திமுக உடன் மதிமுக கூட்டணி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென்று திமுக, அதிமுக உடன் மதிமுக கூட்டணி அமைக்காது என்று
வைகோ அறிவித்தார். திருப்பூர் மாநாட்டிலும் இதனை உறுதிப்படுத்தினார். மக்கள் நலன் காக்கும் கூட்டியக்கத்துடன் சேர்ந்து மதிமுக தேர்தலை சந்திக்கும் என்று வைகோ அறிவித்தது நிர்வாகிகள் பலரை அதிருப்தியில் ஆழ்த்தியது. இதனால் பலரும் கட்சியை விட்டு விலகினர்.
பதவி ஆசை
கட்சியை விட்டு விலகியவர்களை வாழ்த்தி அனுப்பிய வைகோ, மாமல்லபுரத்தில் நேற்று பேசிய போது, வைகோ, "மதிமுகவில் இருந்து விலகுபவர்கள் பதவியை அனுபவித்துவிட்டு விலகுகிறார்கள். மதிமுக தொண்டர்கள் யாரும் கட்சியை விட்டு விலகவில்லை" என்று கூறினார்.
தவறான முடிவு
ஒவ்வொரு முறையும் சட்டப் பேரவை தேர்தல் வருகிற போது, கூட்டணி தொடர்பாக அவர் தவறான முடிவையே எடுக்கிறார் என்று மதிமுகவில் இருந்து சமீபத்தில் விலகிய பாலவாக்கம் சோமு கூறியுள்ளார்.
ஓடும் நிர்வாகிகள்
சேலம் மாவட்ட மதிமுக செயலாளர் கு.சீ.வெ. தாமரைக்கண்ணன், துணை செயலாளர் எஸ்.வி.ராஜேந்திரன், மற்றொரு துணை செயலாளர் டி.ஆனந்தி கண்ணன், மாவட்ட அவைத்தலைவர் ஜெயவேல், சேலம், வாழப்பாடி, பெத்தநாயக் கன் பாளையம், ஓமலூர் ஆகிய ஒன்றியங்களின் மதிமுக செயலாளர்களும் வியாழக்கிழமையன்று திமுகவில் இணைந்தனர்.
நிர்வாகிகள் விலகல்
மாநில மகளிரணி செயலாளர் குமரி விஜயகுமாரும் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி முன்னிலையில் வியாழக்கிழமை திமுகவில் இணைந்தார். இந்த அதிர்ச்சி விலகுவதற்குள் மதிமுக பொருளாளர் மாசிலாமணி, மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் டாக்டர் சரவணன் ஆகியோர் நேற்று மதிமுகவில் இருந்து விலகினர்.
உயர்நிலைக்குழு கூட்டம்
மதிமுகவிலிருந்து மேலும் சிலர் விலகக்கூடும் என்று கூறப்படும் சூழலில், அக்கட்சியின் உயர்நிலைக்குழு கூட்டம் இன்று கூடியுள்ளது.தாயகத்தில் அவைத்தலைவர் துரைசாமி தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மல்லை சத்யா உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். தமிழ் உணர்வு உள்ளவர்கள் யாரும் திமுக உடன் கூட்டணி அமைக்க மாட்டார்கள் என்று வைகோ கூறி வருகிறார். இந்த நிலையில் மதிமுக நிர்வாகிகளை சமாதானப்படுத்தும் வகையில் வைகோவின் பேச்சு அமையுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.