சென்னை டிஎம்எஸ் டூ சிம்சன் மெட்ரோ ரயில் பாதை ரெடி!
சென்னை டிஎம்எஸ் முதல் சிம்சன் வரை மெட்ரோ ரயில் சுரங்க வழி பணிகள் முடிவுக்கு வந்தன.
சென்னை : சென்னை டிஎம்எஸ் முதல் சிம்சன் வரை மெட்ரோ ரயில் சுரங்க பணிகள் முடிவடைந்தன. இந்த பணிகள் கடந்த 2015-ஆம் ஆண்டு மே மாதம் தொடங்கப்பட்டன.
ரூ.14 ஆயிரத்து 600 கோடி மதிப்பில் சென்னையில் 2 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் சேவை பணிகள் கடந்த 2015-ஆம் ஆண்டு தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதில் முதல் வழித்தடமான வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரை 23.05 கிலோ மீட்டர் தூரத்துக்கும், 2-வது வழித்தடமான சென்டிரல் முதல் பரங்கிமலை வரை 22.50 கிலோ மீட்டர் தூரத்துக்கும் பணிகள் நடைபெற்று வந்தன.
இதைத்தொடர்ந்து, ஆலந்தூர்-கோயம்பேடு இடையே கடந்த ஆண்டு முதல் மெட்ரோ ரயில் போக்குவரத்து தொடங்கி வைக்கப்பட்டது. பின்னர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னை விமான நிலையம் முதல் சின்னமலை வரை மெட்ரோ ரயிலை ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
திருமங்கலம் முதல் நேரு பூங்கா வரை கடந்த மே மாதம் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. இந்நிலையில் சென்னை டிஎம்எஸ் முதல் சிம்ஸன் வரை மெட்ரோ ரயில் சுரங்க வழி பணிகள் முடிந்தன.
ஜனவரியில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் சைதை முதல் டிஎம்எஸ் வரை நடைபெறும். ஏர்போர்ட் முதல் வண்ணாரப்பேட்டை வரை மெட்ரோ ரயில் அடுத்த ஆண்டு இறுதியில் இயங்கும். இறுதி கட்ட சுரங்கப் பணி தேனாம்பேட்டையில் முடிவடைந்தது.