இழுத்து மூடப்படுகிறதா மிடாஸ்?!... கோர்ட்டுக்குப் போகும் சசிகலா கோஷ்டிகள்!
சென்னை : வருமான வரி சோதனையை காரணம் காட்டி தமிழக அரசு மிடாஸ் மதுபான ஆலையில் இருந்து கொள்முதல் செய்வதை படிப்படியாக குறைத்தால் வருமானம் பாதித்த மன உளைச்சலில் உள்ளனர் சசிகலா குடும்பத்தினர். இதனால் 2006ம் ஆண்டில் நடந்தது போல இப்போதும் நீதிமன்றத்தை நாடலாமா என்று சசிகலாவிடம் ஆலோசனை கேட்டு அனுமதிக்காக காத்திருக்கின்றனர் குடும்ப உறவுகள்.
மிடாஸ் கோல்டன் சாராய ஆலையின் வருமானம் 5 சதவீதமாகக் குறைந்து போனதால் நொந்து போய் உள்ளனர் சிவக்குமார் உள்ளிட்ட சசிகலா கோஷ்டிகள். ' நாற்பது சதவீதம் அளவுக்குத் தமிழக அரசு விற்றுக் கொண்டிருந்தனர். கடந்த சில வாரங்களாக மிடாஸை மூடும் அளவுக்கு சிக்கல்களை சந்தித்து வருகிறார்கள்' என்கின்றனர் ஆளும் தரப்பில்.
சசிகலாவின் தூரத்து உறவினரான ராவணன், கடந்த 2006 செப்டம்பர் மாதம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். அப்போதுதான் தி.மு.க வெற்றி பெற்று ஆட்சி அமைத்திருந்தது. எழும்பூரில் உள்ள டாஸ்மாக் நிறுவனத்தின் தலைமையகத்தில் இருந்து மாவட்ட டாஸ்மாக் மேலாளர்களுக்கு வாய்மொழி உத்தரவு ஒன்று சென்றது. அதில், ' மிடாஸ் சாராயத்தை ஊக்குவிக்க வேண்டாம். அது தேவையற்ற விளைவுகளை ஏற்படுத்திவிடும்' எனக் கூறியிருந்தனர்.
இதையடுத்து தி.மு.கவைச் சேர்ந்தவர்கள் நடத்தும் சாராய பொருட்களுக்கு ஏக கிராக்கி ஏற்பட்டது. விற்பனையிலும் நல்ல லாபம் பார்த்துக் கொண்டிருந்தனர். மிடாஸின் வருமானம் குறைந்து போனதையடுத்துத் தான் நீதிமன்றத்தை அணுகியிருந்தார் ராவணன்.
ராவணனின் ரிட் மனுக்கள்
அவர் தாக்கல் செய்த இரண்டு ரிட் மனுக்களிலும், ' மிடாஸ் சராய ஆலை என்பது அரசியல் தொடர்புகள் இல்லாமல் செயல்பட்டு வருகிறது. இது ஒரு நிறுவனம். தவறாக புரிந்து கொள்ளப்பட்டதன் விளைவாக, எங்களது பிராண்டுகளை வாங்குவதை தமிழக அரசு குறைத்துக் கொண்டது. இதனால், நாங்கள் உற்பத்தி செய்யும் பல பிராண்டுகளை இழுத்து மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. குறைவான சதவீதமே ஒதுக்கியிருப்பதை ரத்து செய்யுமாறு வேண்டுகிறோம்' எனக் குறிப்பிட்டிருந்தார். நீதிமன்றம் மூலம் உத்தரவு வாங்கினாலும், அதிகாரிகளின் செயல்பாடுகளால் மிடாஸ் சாராயப் பொருட்களை டாஸ்மாக் சந்தையில் விற்க முடியவில்லை.
12 லட்சத்தில் இருந்து குறைந்த கொள்முதல்
தமிழகம் முழுவதும் 12 மதுபான ஆலைகளிடம் இருந்து மாதம்தோறும் 50 லட்சம் மதுபானப் பெட்டிகள் வாங்கப்படுகின்றன. இதில் மிடாஸ் நிறுவனத்திடம் இருந்து மட்டுமே 12 லட்சம் பெட்டிகள் வாங்கப்பட்டு வந்தன. இந்தப் பெட்டிகளின் எண்ணிக்கையை பெருமளவு குறைத்துவிட்டது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு. அதிலும், கடந்த சில வாரங்களாக சொற்பமான எண்ணிக்கையிலேயே மதுபானப் பெட்டிகளை வாங்கத் தொடங்கியுள்ளன்.
ஜீரணிக்க முடியாத சசிகலா கோஷ்டி
வருமான வரித்துறை சோதனையைக் காரணம் காட்டி மிடாஸை ஒட்டுமொத்தமாக மூட வைத்துவிட வேண்டும் என்றுதான் அமைச்சர்கள் சிலர் தெரிவித்தார்கள். ஆனால், டெல்டாவைச் சேர்ந்த சில அமைச்சர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், மதுபான பெட்டிகளின் எண்ணிக்கையை மட்டும் அரசு குறைத்துள்ளது. ஆளும்கட்சியாக இருந்தும் மிடாஸின் வருமானம் குறைந்ததை சசிகலா கோஷ்டிகளால் ஜீரணிக்க முடியவில்லை.
வருமானத்துக்கு செக்
சசிகலா உறவினர் ஒருவரிடம் இது குறித்து பேசிய போது: " மிடாஸ் கோல்டன் நிறுவனத்துக்கான டெண்டர் 2021ம் ஆண்டு முடிகிறது. அதுவரையில் மிடாஸிடம் இருந்து அரசு கொள்முதல் செய்து கொள்ள வேண்டும். டெண்டர் முடிவதற்குள்ளாகவே தமிழக அரசு மிடாஸ் கொள்முதலை நிறுத்திக் கொண்டதற்குக் காரணம், வருமான வரித்துறை ரெய்டுகள். இந்த ரெய்டுகளைக் காரணம் காட்டியே சசிகலா குடும்பத்துக்கு வர வேண்டிய வருமானத்துக்கு செக் வைத்துவிட்டனர்.
நஷ்டத்தில் சாராய ஆலை
இப்போது வெறும் 5 சதவீதம் அளவுக்குத்தான் மதுபானத்தை கொள்முதல் செய்கின்றனர். இதற்கு முன்பு ஆண்டுக்கு 2,500 கோடி ரூபாய் லாபத்தைப் பார்த்துக் கொண்டிருந்தது மிடாஸ். தற்போது கொள்முதல் இல்லாததால், சாராய ஆலை பெரும் நஷ்டத்தில் ஓடிக் கொண்டிக்கிறது. உற்பத்தியை நிறுத்திவிட்டார்கள்.
வழக்கு போட முடிவு
ஏற்கெனவே தயாரித்து குடோனில் வைக்கப்பட்டிருந்த பாட்டில்களைத்தான் சப்ளை செய்து வருகின்றனர். மது இருப்பும் குறைந்து வருவதால் மிகுந்த மன உளைச்சலில் இருக்கின்றனர் மிடாஸ் இயக்குநர்கள். 2006ல் ராவணன் போட்ட வழக்கைப் போலவே, தற்போதும் நீதிமன்றத்தின் மூலம் நிவாரணம் தேடிக் கொள்ள இருக்கிறார்கள். இதற்காக சசிகலாவின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறார்கள்" என்றார்.