நள்ளிரவு கைது.... கருணாநிதி மனதை இன்னமும் வாட்டும் வருத்தம்...!
சென்னை: ஜெயலலிதா ஆட்சியில் தன்னை நள்ளிரவில் கைது செய்தது, தனது குடும்பத்தாரைக் கொடுமைப்படுத்தியதை. தான் இன்னும் மறக்கவில்லை என்றும், அதுதான் தனது மனதை விட்டு அகலாத ஒரே பெரிய வருத்தம் என்றும் திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
நியூஸ் எக்ஸ் தொலைக்காட்சிக்கு திமுக தலைவர் கருணாநிதி 29ம் தேதி சிறப்பு்ப பேட்டி அளித்தார்.
அதில் அவரது இத்தனை ஆண்டு கால பொது வாழ்க்கையில் மனதை மிகவும் வருத்தப்படுத்திய, மனதுக்கு மகிழ்ச்சி தந்த விஷயங்கள் குறித்துக் கேட்கப்பட்டது. அதற்குக் கருணாநிதி அளித்த பதில்...
மனவருத்தத்தைத் தந்தது ஜெயலலிதா ஆட்சியில் என்னை நள்ளிரவில் கைது செய்து கொடுமைப் படுத்தி என்னுடைய வீட்டாரை, பிள்ளைகளை, மாறன் போன்ற என்னுடைய உறவினர்களைச் சித்திரவதை செய்தார்களே அது எனக்கு மிக வருத்தம் தந்தது. அது எனக்கு பெரிய மன வருத்தமாகும்.
மன மகிழ்ச்சி தந்த விஷயங்கள் எவ்வளவோ உள்ளன. அவை அத்தனையையும் இங்கே சொல்ல இயலாது என்று கூறினார் கருணாநிதி.
இந்தப் பேட்டியில் கருணாநிதியிடம் கேட்கப்பட்ட சில கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும்:
மூன்றாவது அணி அமைந்திருக்கிறதே, அது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நினைக்கிறீர்களா? இரு தினங்களுக்கு முன்னர் பிரேமலதா பேசும் போது கூட சொன்னார்கள், நாங்கள் திமுகவுடன் நிச்சயமாக எந்தவித பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்று?
கருணாநிதி: தேடித் தேடிப் பார்க்கிறேன்! அந்த மூன்றாவது அணி எங்கே இருக்கிறது என்றே தெரியவில்லை!
சமூக வலைதளங்களில் நீங்கள் நிறைய ஈடுபாடு காட்டி வருகின்றீர்கள். ஆன் லைன், பேஸ்புக்கில் நீங்கள் இருக்கின்றீர்கள். டுவிட்டரிலும் நீங்கள் இருக்கிறீர்கள். அது இளைஞர்கள் மத்தியில் எந்த மாற்றத்தை ஏற்படுத்துகிறது?
கருணாநிதி: இளைஞர்களுக்கு மத்தியில் அது ஏமாற்றத்தை ஏற்படுத்தாத காரணத்தால் தான் புதிய மாற்றங்கள் வருவதற்கான அறிகுறிகள் - இளைஞர்களுக்கு தெரிந்திருக்கிற காரணத்தால்தான் இளைஞர்களும் தி.மு.க.வை ஒரு வழி காட்டியாக வைத்திருக்கிறார்கள்.
எதிர்க் கட்சிகள் உங்கள் மீது குற்றஞ் சாட்டும்போது, குடும்ப அரசியல், ஊழல் இதைப் பற்றியெல்லாம் பேசுகிறார்கள். அவர்களுக்கான பதிலடி என்னவாக இருக்கும்?
கருணாநிதி: பதிலடி கொடுக்கும்போது நீங்கள் புரிந்து கொள்ளலாம்
நீங்கள் அண்ணாவுடன் பிரச்சாரம் செய்திருக்கிறீர்கள். இப்போது நீங்களும் ஸ்டாலின் அவர்களும் சேர்ந்து பிரச்சாரம் செய்கிறீர்கள். அது எப்படிப்பட்ட ஒரு உணர்வு. அதே மாதிரி நீங்கள் நாளை முதல்வராக ஆனபிறகு, ஸ்டாலின் அவர்களுக்கு எந்த மாதிரியான ஒரு பங்கு கட்சியிலேயும், ஆட்சியிலேயும் இருக்கும்?
கருணாநிதி: ஸ்டாலின் நீண்ட காலமாகவே கட்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருபவர். என்னைப் போலவே, அவரும் தொண்டு செய்ய வேண்டும் என்று வந்தவர்தான். தொண்டர்களுக்குக் கிடைக்கின்ற பரிசு, எனக்கும் கிடைக்கும், ஸ்டாலினுக்கும் கிடைக்கும்.
தேர்தலில் குடும்பப் பிரச்சினைகளைப் பற்றியெல்லாம் பேசுகின்றார்களே?
கருணாநிதி: குடும்பத்தைப் பற்றி யார் பேசுகிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. அப்படிப் பேசுகின்றவர்கள் தமிழ்நாட்டில் தரக்குறைவான அரசியலை நடத்துபவர்கள் தான் என்றார் கருணாநிதி.