தடையில்லாமல் இன்று வழக்கம் போல் ஆவின் பால் கிடைக்கும்: தமிழக அரசு
தடையில்லாமல் ஆவின் பால் கிடைக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வழக்கம் போல் ஆவின் பால் கிடைக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசின் சார்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை:
வர்தா புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளால் பால் விநியோகம் நிறுத்தப்படவில்லை என்றும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வழக்கம் போல் ஆவின் பால் கிடைக்கும் என்று அரசு தகவல் தெரிவித்துள்ளது.
சென்னையில் திங்கள்கிழமையன்று 11.49 லட்சம் லிட்டர் பால் விநியோகம் செய்யப்பட்டது. அதில் 7.56 லட்சம் லிட்டர் பால் 132 வழித்தடங்களில் நுகர்வோருக்கும் மீதம் 3.93 லட்சம் லிட்டர் பால் மொத்த விநியோகஸ்தர்களுக்கும் விநியோகிக்கப்பட்டது. எனவே பால் விநியோகம் திங்கள்கிழமையன்று இயல்பாக இருந்தது.
இத்தகைய இயல்பான விநியோகத்தைத் தவிர, தட்டுப்பாடின்றி பால் கிடைக்க சென்ன நகர ஆவின் பால் நிலையங்களுக்கு கூடுதல் பால் விநியோகமும் நாள் முழுவதும் செய்யப்பட்டது.
சென்னையில் உள்ள மாதவரம், அம்பத்தூர், சோழிங்கநல்லூர் பால் உற்பத்தி நிலையங்களில் முழுமையான அளவில் ஜெனரேட்டர் வசதி உள்ளதால், பால் உற்பத்தி இன்று திங்கள்கிழமை வழக்கம்போல் சீராக நடைபெற்றது.
எனவே, சென்னை, புறநகர்ப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமையும் (டிச.13) மேலே குறிப்பிட்ட 11.49 லிட்டர் பாலை விநியோகம் செய்வதில் எந்தப் பிரச்னையும் இருக்காது. பால் கிடைக்காத நுகர்வோர் கட்டணமில்லா செல்லிடப்பேசி எண் 18004253300-ஐ தொடர்பு கொள்ளலாம் என்று அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.