இஸ்லாமியருக்கு எதிராக ராஜேந்திர பாலாஜி தெரிவித்தது சொந்த கருத்து: அமைச்சர் ஜெயக்குமார்
சென்னை: இஸ்லாமியருக்கு எதிராக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தது சொந்த கருத்து; அதிமுகவின் நிலைப்பாடு அல்ல என்று அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் இந்துத்துவா பயங்கரவாதம் உருவாகும் என்றும் இஸ்லாமியர்களுக்கு எதிராகவும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்துகளை தெரிவித்திருந்தார். இது கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் திமுக மனு ஒன்றையும் கொடுத்துள்ளது.
இந்நிலையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்த கருத்துகள் அவரது சொந்த கருத்துகள்; அதிமுகவின் நிலைப்பாடு அது அல்ல என்று அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்திருக்கிறார். ஆகையால் ராஜேந்திர பாலாஜியின் சொந்த கருத்துக்காக ஆளுநரிடம் எப்படி திமுக முறையிட முடியும்? ராஜேந்திர பாலாஜி பேசியதில் உள்நோக்கம் எதுவும் இல்லை என்றும் ஜெயக்குமார் கூறினார்.