கட்சியை வழிநடத்த குழு அமைக்கப்படும்: ஜெயக்குமார் அறிவிப்பு!
கட்சியை வழிநடத்த குழு அமைக்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை: கட்சியை வழிநடத்த குழு அமைக்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். கட்சி மற்றும் ஆட்சியிலிருந்து சசிகலா குடும்பத்தை ஒதுக்குவதாக அறிவித்தப்பின் அமைச்சர் ஜெயக்குமார் இதனை தெரிவித்தார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தன்னை அதிமுக பொதுச்செயலாளராக நியமித்துக் கொண்ட சசிகலா கட்சியை கைப்பற்றினார். இதைத்தொடர்ந்து ஆட்சியை கைப்பற்ற முயன்ற அவர், குடும்பத்தினரின் உதவியுடன் அப்போதைய முதல்வர் ஓபிஎஸை மிரட்டி ராஜினாமா செய்ய வைத்தார்.
இதைத்தொடர்ந்து முதல்வராக பதவியேற்கவும் நாள் குறித்தார் சசிகலா. ஆனால் சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு இடிப்போல் விழுந்து சசிகலாவின் கனவை சுக்குநூறாக உடைத்தது.
எடப்பாடி தலைமையில் ஆட்சி
இதையடுத்து பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா. பின்னர் அதிமுக எம்எல்ஏக்களின் ஒத்துழைப்பால் சசிகலா தரப்பின் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு ஆட்சியமைத்தது.
ஒட்டுமொத்தமாக ஒதுக்குவதாக
இதைத்தொடர்ந்து ஆட்சியிலும் சசிகலா குடும்பத்தின் ஆதிக்கம் தலைவிரித்தாடியாது. சசிகலாவால் துணைப்பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட டிடிவி தினகரன் ஆட்சி அதிகாரத்தில் தலையிடுவதாக புகார்கள் எழுந்தன. இந்நிலையில் சசிகலா குடும்பத்தினரை ஒட்டுமொத்தமாக ஒதுக்குவதாக எடப்பாடி தலைமையிலான அமைச்சர்கள் அறிவித்துள்ளனர்.
புதியக்குழு அமைக்கப்படும்
எடப்பாடி பழனிச்சாமியின் இந்த முடிவு தமிழக அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. கட்சிப் பொறுப்பில் இருந்தவர்கள் நீக்கப்பட்டதால் கட்சி நிர்வாககத்தை கவனிக்க குழுஅமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தக்குழு கட்சியை வழிநடத்தும் என்றும அவர் கூறியுள்ளார்.
அனைவரின் விருப்பம்
ஒற்றுமையாக கட்சியயை வழிநடத்த வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எடப்பாடி அரசின் இந்த முடிவால் கட்சியிலும் ஆட்சியிலும் இனி சசிகலா குடும்பத்தின் ஆதிக்கம் இருக்காது என தெரிகிறது.