என்ன கேட்குறாங்களோ கொடுங்கண்ணு தலைவர் சொல்லிட்டாரு! இடியாப்பம் ஈஸியா புளிய மெஷின்கள்! -ராஜகண்ணப்பன்
சென்னை: பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் மற்றும் சிறுபான்மையினர் மாணவர்கள் விடுதிகளில் என்ன கேட்கிறார்களோ அதை கொடுக்குமாறு தலைவர் தன்னிடம் சொல்லியிருக்கிறார் என அமைச்சர் ராஜகண்ணப்பன் சட்டசபையில் தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் பேசும் போது அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைவர் என்று குறிப்பிட்டது முதலமைச்சர் ஸ்டாலினை தான்.
தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தினம் தோறும் துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெறுகின்றன.

அந்த வகையில் இன்று பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் நலத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது.
அதில் பங்கேற்று பேசிய அத்துறையின் அமைச்சர் ராஜகண்ணப்பன், 20 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் கவனம் ஈர்க்கும் படியாக இருந்தது, பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் மற்றும் சிறுபான்மையினர் மாணவர்கள் விடுதிகளில் என்ன கேட்கிறார்களோ அதை கொடுக்குமாறு ஸ்டாலின் தன்னிடம் சொல்லியிருக்கிறார் என அவர் கூறியது தான்.
அதேபோல் இந்த விடுதிகளில் தங்கி பயிலும் மாணவர்களுக்கு இடியாப்பம் செய்து கொடுப்பதற்கு வசதியாக தலா ரூ.65,000 மதிப்பில் ரூ.1 கோடியே 88 லட்சம் ரூபாய் செலவில் இடியாப்பம் அச்சு இயந்திரம் வழங்கப்படும் என அறிவித்தார் ராஜகண்ணப்பன்.
இதை படிப்பவர்களுக்கு இதில் என்ன ஆச்சரியம் உள்ளது என எண்ணத் தோன்றலாம். ஆனால், அரசு பிற்படுத்தப்பட்டோர் விடுதிகளில் தங்கி பயிலும் மாணவர்களும் வாய்க்கு ருசியாக இடியாப்பம் சாப்பிட வேண்டும் என்ற சிந்தனையின் வெளிப்பாடாக தான் இடியாப்பம் அச்சு இயந்திரம் வழங்கப்படுகிறது.
இதன் மூலம் இனி வாரத்திற்கு ஒரு நாளோ, இரண்டு நாட்களோ மேற்கண்ட விடுதிகளில் இடியாப்பம், குருமா காலை வேளைகளில் வழங்கப்படவுள்ளது.

பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறைகளின் கீழ் இயங்கும் 1,354 விடுதிகளில் 18 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2022 ஜூன் மாதம் தான் உணவுப்பட்டியல் மாற்றப்பட்டன.
அதன் படி சேமியா கிச்சடி, பூரி மசால், இட்லி சாம்பார், பொங்கல், ஊத்தாப்பம், ரவா கிச்சடி, தோசை, இடியாப்பம் உள்ளிட்ட டிபன்கள் தினமும் நாள் கிழமை சுழற்சி முறையில் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதில் இடியாப்பம் செய்வது தான் சற்று பெரிய பணியாக இருந்து வந்த நிலையில், இடியாப்பம் அச்சு இயந்திரங்களை வாங்கிக் கொடுத்து சமையலர்களின் பணியை எளிமையாக்க உள்ளது தமிழக அரசு.












Click it and Unblock the Notifications