ஓபிஎஸ் அணிக்கு தாவுகிறார் சசி, தினகரன் எதிர்ப்பு கோஷங்களை ரசித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி?
மதுரை விமான நிலையத்தில் சசிகலா, தினகரன் எதிர்ப்பு கோஷங்களை ரசித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஓபிஎஸ் அணிக்கு தாவக் கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
மதுரை: இரட்டை இலை சின்னம் யாருக்கு என்ற விவகாரத்தில் கிளைமாக்ஸ் நெருங்கும் நிலையில் சசிகலா, தினகரன் எதிர்ப்பு கோஷங்களை பற்றி கவலையேபடாத அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் நடவடிக்கையால் சசி அதிமுக அதிர்ந்து போயுள்ளது.
தென்மாவட்ட சுற்றுப் பயணத்தை முடித்துவிட்டு மதுரை விமான நிலையத்துக்கு நேற்று வருகை தந்தார் ஓபிஎஸ். அப்போது அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் விமான நிலையம் வருகை தந்தார்.
ஓபிஎஸ் வந்த போது, அவரது ஆதரவாளர்கள் சசிகலா, தினகரனுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். இந்த முழக்கங்கள் அனைத்தையும் ஒரு ஓரமாக உட்கார்ந்தபடியே ரசித்து கொண்டிருந்தாராம் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.
சசிகலா போஸ்டரை ஒரு அதிமுக தொண்டர் கிழித்ததற்காகவே அவரை புரட்டி எடுத்த ராஜேந்திர பாலாஜியா இப்படி? என அதிமுக தொண்டர்கள் அதிர்ந்து போனர்களாம். இது குறித்து நாம் விசாரித்த போது, ராஜேந்திரபாலாஜியைப் பொறுத்தவரையில் அவர் திவாகரன் ஆதரவாளர்.
தற்போது இரட்டை இலை தொடர்பான முடிவு வர உள்ளது. அணி தாவும் நிலையும் உருவாகலாம். இந்த நிலையில் ஏதாவது நாம் செய்யப் போய் எதுக்கு பிரச்சனை என அமைதியாக உட்கார்ந்துவிட்டாராம் ராஜேந்திர பாலாஜி.