அமைச்சர் ரமணா தம்பி கொலையில் அதிமுக ஊராட்சி தலைவர் கைது: கடைகள் அடைப்பு
திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு ஒசூரம்மன் கோயில் தெருவில் வசித்து வருபவர் ஜெயராமன். இவர் வியாபாரிகள் சங்கத் தலைவராக உள்ளார். பால்வளத் துறை அமைச்சர் ரமணாவின் சித்தப்பா. இவரது மகன் ரவி(45). இவர் வீட்டு மனைகளை வாங்கி விற்பது மற்றும் ஒப்பந்த முறையில் வீடுகளை கட்டித் தரும் தொழில் செய்து வந்தார். மேலும், ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே ஹார்டுவேர்ஸ் கடையும் வைத்துள்ளார். இவருக்கு ஷகிலா(40) என்ற மனைவியும், பூர்ணிமா(16), யுக்தா(14) என்ற இரண்டு மகள்களும் உள்ளனர்.
வெட்டிக் கொலை
செவ்வாய்கிழமையன்று பிற்பகல் 2 மணியளவில், ரவி தனது கடைக்கு பைக்கில் சென்றுகொண்டு இருந்தார். அப்போது, இரண்டு பைக்குகளில் அவரை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் 5 பேர், கத்தியுடன் சென்று ரவியின் பைக்கை இடைமறித்து நிறுத்தினர். இதில் அதிர்ச்சியடைந்த ரவி, பைக்கை அப்படியே விட்டுவிட்டு ஓடினார். அப்போது அந்த மர்ம கும்பல் துரத்திச் சென்று, வீச்சரிவாளால் கழுத்து, தாடை, தலை ஆகிய பகுதிகளில் சரமாரியாக ரவியை வெட்டி விட்டு பைக்கில் தப்பியது. குறிப்பாக அடையாளம் தெரியாத அளவுக்கு கொலையாளிகள் அவரது முகத்தை சிதைத்துள்ளனர்.
போலீஸ் குவிப்பு
இந்த வெறியாட்டத்தில், மூளை சிதறி சம்பவ இடத்திலேயே ரவி பலியானார். தகவலறிந்து, நூற்றுக்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்தில் குவிந்ததால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க மாவட்ட குற்றப்பிரிவு கூடுதல் எஸ்.பி., சந்திரசேகர் தலைமையில், 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். இச்சம்பவத்தை கண்டித்து அப்பகுதி வியாபாரிகள் தங்களது கடைகளை அடைத்தனர்.
ரவியின் சடலத்தை போலீசார், திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து செவ்வாப்பேட்டை போலீசார் வழக்குபதிந்து, தொழில் போட்டியால் நடந்த கொலையா, வேறு காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரித்து வந்தனர்.
மிரட்டல் கடிதம்
15 நாட்களுக்கு முன், ரவியின் கடைக்கு முகத்தை துணியால் மூடியவாறு ஹெல்மெட் அணிந்துகொண்டு மர்ம நபர் ஒருவர் பைக்கில் வந்ததாகவும், அவர் ரவியிடம் கடிதம் ஒன்றை கொடுத்துவிட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது.
அக்கடிதத்தில், ‘புஜங்கண்டிகை நிலப் பிரச்னையில் தலையிட்டால், உன் உயிருக்கு ஆபத்து' என குறிப்பிடப்பட்டு இருந்ததாகவும், இதுகுறித்து செவ்வாப்பேட்டை போலீஸ் நிலையத்தில் ரவி புகார் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், இரண்டு நாட்களுக்கு முன்பு, ரவியின் செல்போனுக்கு மர்ம நபர் ஒருவர் தொடர்புகொண்டு, மிரட்டியதாகவும், அதுகுறித்தும் ரவி, செவ்வாப்பேட்டை போலீசில் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
தனிப்படை தேடுதல் வேட்டை
குற்றவாளிகளை பிடிக்க இன்ஸ்பெக்டர்கள் கோகுல்ராஜ், பொன்ராஜ், கங்காதரன், ஜெயக்குமார் ஆகியோர் தலைமையில் 4 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. தனிப்படை போலீசார் ஆந்திரா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று, குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
2 பேர் கைது
தொழில் போட்டியால் இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வரும் போலீசார், செவ்வாப்பேட்டை ஊராட்சி மன்ற தலைவரான அதிமுகவை சேர்ந்த வெங்கடேசன் (50), நெமிலிச்சேரியை சேர்ந்த திருநாவுக்கரசு (45) ஆகியோரை நேற்று இரவு கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.