குற்றாலத்தில் சாரல் திருவிழா: அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, ராஜலட்சுமி விளக்கேற்றி தொடங்கி வைத்தனர்
நெல்லை: தென்னகத்தின் ஸ்பா என்று பெருமையோடு அழைக்கப்படும் குற்றால சாரல் திருவிழாவை அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, ராஜலட்சுமி ஆகியோர் குத்துவிளக்கேற்றி சனிக்கிழமை தொடங்கி வைத்தனர்.
குற்றாலத்தில் நிலவும் இதமான சீசனை அனுபவிக்க ஆண்டுதோறும் ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை ஆண்டு தோறும் 50 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் குற்றாலம் வந்து செல்கின்றனர். சுற்றுலா பயணிகளை மகிழ்விப்பதற்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சாரல் திருவிழா நடத்தப்படுகிறது.
இந்தாண்டு சாரல் திருவிழா இன்று குற்றாலம் கலைவாணர் அரங்கத்தில் சனிக்கிழமா மாலை 5 மணியளவில் தொடங்கியது. நெல்லை மாவட்ட ஆட்சியர் கருணாகரன் அனைவரையும் வரவேற்று பேசினார். பின்னர் தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி, செய்தி மற்றும் விளமபரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, ஆகியோர் குத்து விளக்கேற்றி வைத்து விழாவை தொடங்கி வைத்தனர். விழாவில் மக்களவை உறுப்பினர்கள் வசந்தி முருகேசன், பிரபாகரன், சட்டமன்ற உறுப்பினர்கள், அபூபக்கர், மனோகரன் உள்ளிட்டவர்களை கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் பேசிய அமைச்சர் ராஜ லட்சுமி தமிழகம் முன்னேற்ற பாதையில் செல்வதாகவும்,ஏற்றமும் மாற்றமும் நிறைந்த மாநிலமாக தமிழகம் மாறி வருவதாகவும் தெரிவித்தார். அமைச்சர் கடம்பூர் ராஜு பேசும் போது, குற்றாலத்தின் வளர்ச்சிக்காக 2015-2016 ஆம் ஆண்டு 12.50 கோடி ஒதுக்கீடு செய்யபபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பின்னர் பரதநாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இன்று தொடங்கியுள்ள சாரல் திருவிழா வரும் ஆகஸ்ட் 6ஆம் தேதி வரை நடைபெறுகிறது. விழா நடைபெறும் 8 நாளும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.