என்ன வச்சு 'லந்து' செய்யறீங்க.. மீடியாக்களிடம் இருந்து ஓட்டம் பிடித்த செல்லூர் ராஜூ!
தன்னை வைத்து காமெடி செய்வதாக கூறி மீடியாக்களுக்கு பேட்டியளிக்க மறுத்து அமைச்சர் செல்லூர் ராஜூ ஓட்டம் பிடித்தார்.
மதுரை: தன்னை வைத்து காமெடி செய்வதாக கூறி மீடியாக்களுக்கு பேட்டியளிக்க மறுத்து அமைச்சர் செல்லூர் ராஜூ ஓட்டம் பிடித்தார்.
அமைச்சர் செல்லூர் ராஜூ வைகை அணையில் இருந்து நீர் ஆவியாவதை தடுக்க தெர்மாகோலைக் கொண்டு மூடினார். ஆனால் அடுத்த சில நிமிடங்களிலேயே தெர்மாகோல்கள் கரை ஒதுங்கின.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. அவ்வளவு பெரிய அணையை சிறிய தெர்மாகோல் கொண்டு மூடிய அமைச்சரை சமூக வலைதளங்கள் மட்டும்மின்றி எதிர்க்கட்சியினரும் சரமாரியாக கலாய்த்தனர்.
பிரபலமான அமைச்சர்
அன்று முதல் பெரும் பிரபலமாகிவிட்டார் அமைச்சர் செல்லூர் ராஜூ. அவர் எதை செய்தாலும் அது காமெடியாகத்தான் இருக்கும் என்ற நிலைமைக்கு வந்துவிட்டார்.
கட்சியினருக்கு அதிர்ச்சி வைத்தியம்
சசிகலா பரோலில் வந்தபோது, இந்த ஆட்சி அமைய சசிகலாதான் காரணம் என்று கூறி ஓபிஎஸ்க்கும் ஈபிஎஸ்க்கும் அதிர்ச்சி வைத்தியம் அளித்தார். பின்னர் மனசாட்சிப்படிதான் கூறினேன் என விளக்கம் அளித்தார்.
டெங்குவை தடுக்க யோசனை
தொடர்ந்து வீட்டு வாசலில் சாணம் தெளித்தால் டெங்கு வராது என்றும் அவர் கூறினார். மேலும் மழை அதிகமாக பெய்வதால் தான் டெங்கு அதிகமாக பரவுவதாகவும் அவர் தெரிவித்தார்.
மீம்ஸ்களின் மன்னர்
இதனால் சமூக வலைதளங்களில் பெரிதும் கலாய்க்கப்பட்டார். அவர் குறித்த மீம்ஸ்கள் அதிகளவில் வெளியாகி வருகின்றன.
லந்து செய்யறீங்க
இந்நிலையில் மதுரையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டார். அப்போது மீடியாக்காரர்கள் மைக்குடன் அவரிடம் செல்ல, என்னை வைத்து லந்து செய்கிறீர்கள் என்ற கலகலப்பாக கூறிவிட்டு ஓட்டம்பிடித்தார் அமைச்சர் செல்லூர்.