ப்ளஸ் 2 தேர்வுகள் தொடக்கம்.. எழும்பூர் அரசுப்பள்ளியில் அமைச்சர் செங்கோட்டையன் ஆய்வு
ப்ளஸ் 2 தேர்வுகள் தொடங்கியுள்ள நிலையில் எழும்பூர் அரசுப்பள்ளியில் அமைச்சர் செங்கோட்டையன் ஆய்வு செய்தார்.
சென்னை: பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்கியுள்ள நிலையில் எழும்பூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆய்வு செய்தார். அப்போது தமிழ் உட்பட 10 மொழிகளில் மாணவர்கள் தேர்வு எழுதுவதாக அவர் தெரிவித்தார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கின. இதனையொட்டி எழும்பூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் பள்ளிக்கல்வித்துறை செயலர் சபீதா ஆய்வு செய்தனர்.
அப்போது தேர்வு எழுதும் மாணவர்களை அவர் நேரில் பார்வையிட்டார். பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது கடந்த ஆண்டை விட இந்த ஆண்டும் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக அவர் கூறினார். ஊக்கத் தொகை வழங்குவதால் அரசு பள்ளிகளில் மாணவர்கள் படிக்கின்றனர் என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
ப்ளஸ் 2 தேர்வை தமிழ் உட்பட 10 மொழிகளில் மாணவர்கள் எழுதுவதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். அமைச்சர் ஆய்வின் போது சென்னை மாவட்ட ஆட்சியர் மற்றும் முதன்மை கல்வி அலுவலர்களும் உடனிருந்தனர்.