தமிழகக் காய்கறிகளில் நச்சுத்தன்மை கிடையாது... சட்டப்பேரவையில் அமைச்சர் வைத்திலிங்கம் தகவல்
சென்னை : தமிழகத்தில் விளையும் காய்கறிகள் நச்சுத்தன்மை எதுவும் இல்லை என்றும், கேரளத்துக்குத் தொடர்ந்து காய்கறிகள் விற்பனைக்குச் செல்வதாகவும் தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் வேளாண்மைத் துறை மீதான மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர் சுப.தங்கவேலன் பேசும்போது, தமிழகத்தின் காய்கறிகள் நச்சுத்தன்மை உள்ளவை என்று கேரள அரசு தடைவிதித்திருப்பதாகவும், இது தொடர்பாக ஆய்வு செய்து அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறினார்.
இதற்கு பதிலளித்துப் பேசிய வேளாண்துறை அமைச்சர் வைத்திலிங்கம், தமிழகத்தில் விளையும் காய்கறிகளில் நச்சுத்தன்மை இல்லை என்றும், கேரளத்துக்குக் காய்கறிகள் தினமும் விற்பனைக்குச் செல்வதாகவும் தெரிவித்தார். ஒட்டன்சத்திரத்தில் இருந்து நேற்று (திங்கள்கிழமை) 700 டன் காய்கறிகள் கேரளாவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் வைத்திலிங்கம் கூறினார்.
தமிழகத்தில் விளையும் காய்கறிகளில் நச்சுத் தன்மை உள்ளதாகக் கூறி, அந்த காய்கறிகள் நுழைய தடை விதத்து கேரள அரசு தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது அந்த தடை நீக்கப்பட்டு வழக்கம் போல தமிழக காய்கறிகள் கேரளாவுக்கு செல்வதாக வைத்திலிங்கம் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.