இங்கிட்டு அமைச்சர்கள் ஆலோசனை.. அங்கிட்டு ஐடி விசாரணைக்கு ஆஜரான விஜயபாஸ்கர் !
அமைச்சர் விஜயபாஸ்கரிடம் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
சென்னை: வருமான வரித்துறையினர் அனுப்பிய சம்மனை தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னை வருமான வரித்துறை அலுவலகத்தில் இன்று 3-வது முறையாக ஆஜராகினார். அதேவேளையில் அதிமுக அமைச்சர்களின் ஆலோசனை கூட்டம் அமைச்சர் தங்கமணி இல்லத்தில் நடைபெற்று வருகிறது.
தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் சென்னை வீடு மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்களின் வீடுகளில் கடந்த 7ம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். விஜயபாஸ்கருக்கு சொந்தமான புதுக்கோட்டையில் உள்ள வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. சோதனையில் பணம் மற்றும் ஆர்.கே.நகர் தொகுதியில் பணம் பட்டுவாடா செய்ததற்கான ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியானது.
மேலும் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி, நடிகர் சரத்குமார் உள்ளிட்டோரின் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது ரூ.89 கோடி பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இந்நிலையில் இந்த சோதனை அறிக்கையின்படி, தேர்தல் ஆணையம் தேர்தலை நிறுத்தியது. மேலும் மேற்கண்ட மூவருடன் சிட்லபாக்கம் ராஜேந்திரனுக்கும் நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது.
இதனையடுத்து, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரி புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர், சரத்குமார், கீதாலட்சும், சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகியோர் தனித்தனியாக ஆஜராகினர். அவர்களிடம் பல மணிநேரம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் மாநிலம் முழுவதும் வருமான வரித் துறையிநர் நடத்திய சோதனையில் போதிய ஆதாரங்கள் கிடைத்து உள்ளன. இதுவரை நடந்த விசாரணையில் ஆஜரானவர்கள் முரண்பட்ட பதில்களையே அளித்தனர். உண்மை விபரங்களை அவர்களிடம் இருந்து பெறுவதற்காக தான் இன்று வருமானவரி புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் ஆஜராக அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், துணைவேந்தர் கீதாலட்சுமி ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
அதன்படி சென்னை நுங்கம்பாக்கம் வருமான வரித்துறை அலுவலகத்தில் இன்றிரவு அமைச்சர் விஜயபாஸ்கர் 3வது முறையாக ஆஜராகினார். அவரிடம் சுமார் 1 மணிநேரத்திற்கும் மேலாக அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி வீட்டில் தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார் உள்ளிட்ட 20 அமைச்சர்கள் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். அமைச்சர் விஜயபாஸ்கரை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என கலகலக்குரல் வெடித்துள்ள நிலையில், இந்த ஆலோசனை கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.