நாளைக்குள் பணிக்கு திரும்பாவிட்டால் நடவடிக்கை.. போக்குவரத்து ஊழியர்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை
கரூர்: நாளைக்குள் அரசு போக்குவரத்து ஊழியர்கள் பணிக்கு திரும்பாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரித்தார்.
கரூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாளைக்குள், ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ள அனைத்து போக்குவரத்து ஊழியர்களும், பணிக்கு திரும்ப வேண்டும். அல்லது, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் இன்று சுமார் 80 சதவீத பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மக்கள் கஷ்டப்பட கூடாது என்பதில் அரசு உறுதிகாட்டி முடிந்த அளவுக்கு பஸ் போக்குவரத்து பாதிக்கப்படாமல் பார்த்துக்கொண்டுள்ளது.
நாளை 100 சதவீதீம் பேருந்துகளும் இயங்கும் என எதிர்பார்க்கிறேன். இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். கனரக வாகனங்கள் இயக்கும் லைசென்ஸ் வைத்துள்ள டிரைவர்களை தற்காலிக டிரைவர்களாக பணிக்கமர்த்தி பல இடங்களில் அரசு பஸ்கள் இன்று இயக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.