காவிரி விவகாரத்திற்காக சந்திக்க நேரம் ஒதுக்குங்கள்.. மோடிக்கு ஸ்டாலின் கடிதம்
சென்னை: காவிரி விவகாரம் குறித்து எதிர்க்கட்சி தலைவர்களுடன் வந்து சந்திக்க நேரம் ஒதுக்கும்படி பிரதமர் நரேந்திர மோடிக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழகத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், விவசாய அமைப்புகளும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றன. சமீபத்தில் சென்னை வந்த மோடிக்கு கருப்பு கொடி காண்பித்து திமுக பெரும் போராட்டத்தை முன்னெடுத்தது.
நேற்று ஸ்டாலின் தலைமையில் காவிரி பற்றிய, எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த நிலையில், அனைத்து கட்சி தலைவர்களுடன் நேரில் சந்திக்க நேரம் ஒதுக்கும்படி பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் இன்று ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
காவிரி உரிமையை தமிழக அரசு பாதுகாக்கும் என்ற நம்பிக்கையை மக்கள் இழந்துவிட்டனர். காவிரி விவகாரத்தில் மக்களின் உணர்வுகளை தெரிவிக்க நேரம் ஒதுக்க வேண்டும். காவிரி விவகாரத்தில் பிரதமர் தலையிட வேண்டும். விளக்கம் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மனுவை திரும்ப பெற உத்தரவிட வேண்டும். கர்நாடக தேர்தலுக்காக காத்திருக்காமல், உடனடியாக காவிரி வாரியத்தை அமைக்க வேண்டும்.
உச்சநீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் வகையில் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் மற்றும் செயலரை கண்டிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.