ஹார்வார்டு பல்கலைக்கழக தமிழ் இருக்கை அமைய ரூ. 1 கோடி நிதியை வழங்கினார் மு.க.ஸ்டாலின்
ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைய ரூ. 1 கோடி நிதியை நிதி திரட்டும் குழுவினரிடம் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அளித்தார்.
Recommended Video

சென்னை: ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைய ரூ. 1 கோடி நிதி அளிப்பதாக நேற்று அறிவித்த நிலையில் இன்று அந்த நிதியை நிதி திரட்டும் குழுவினரிடம் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
உலக பிரசித்தி பெற்ற ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் கிரேக்கம், லத்தீன், ஹீப்ரு, பாரசீகம், சமஸ்கிருதம், சீனம் ஆகிய மொழிகளுக்கு இருக்கைகள் அமைக்கப்பட்டு மாணவர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். தமிழ் இருக்கைக்கென ரூ 40 கோடி செலவாகும் என ஹார்வர்டு பல்கலைக் கழகம் கூறியது.

இதையடுத்து தமிழ் ஆர்வலர்கள், நடிகர்கள், சமூக ஆர்வலர்கள் என தங்களால் இயன்ற உதவியை அளித்து வந்தனர். தமிழக அரசும் ரூ. 10 கோடி நிதியை அளித்தது. இந்நிலையில் இதுவரை ரூ. 38 கோடி நிதி திரட்டி விட்டதாக நிதி திரட்டும் குழுவினர் தெரிவித்தனர்.
மீதம் 2 கோடி நிதி பற்றாக்குறை குறித்து திமுக அறிந்தது. இதையடுத்து அந்த பற்றாக்குறையில் திமுக சார்பில் ரூ.1 கோடியை அளிப்பதாக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
அதன்படி அந்த தொகையை தமிழ் இருக்கைக்கு நிதி திரட்டும் குழுவினரிடம் ஸ்டாலின் வழங்கினார். உடன் திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன், முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு, வழக்கறிஞர் அருள்மொழி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதன் மூலம் கட்சி அளவில் அதிக நிதி வழங்கிய கட்சி என்ற பெருமையை திமுக பெற்றுள்ளது. இன்னும் ஒரு கோடி நிதியும் திரட்டப்பட்டு விரைவில் தமிழ் இருக்கை அமைய பெறும் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications