கழகங்கள் இல்லாத தமிழகமா?... பாஜகவை கிழித்து தொங்க விட்ட ஸ்டாலின்!
கழகங்கள் இல்லாத தமிழகம் என பேசி வரும் பாஜகவை பொதுக்கூட்ட மேடை ஒன்றில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கிழித்து தொங்கவிட்டுள்ளார்.
Recommended Video
கடலூர்: கழகங்கள் இல்லாத தமிழகம் என பேசி வரும் பாஜகவிற்கு பொதுக்கூட்ட மேடையில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் பாஜகவை கிழித்து தொங்கவிட்டுள்ளார். 'புறம்போக்குகள்' எல்லோரும் மேடை போட்டு பேசக்கூடிய நிலையை உருவாக்கியது திராவிட மண் என்றும் அதை மறந்துவிட்டு பேசக் கூடாது என்றும் ஸ்டாலின் ஆவேசத்துடன் பேசினார்.
தமிழகத்தில் திராவிடக் கட்சிகளால் ஊழல் மலிந்து விட்டது. தமிழகத்தில் மாற்றம் கொண்டு வர முடியும் என்றால் அது மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவால் தான் முடியும் என்று தொடர்ந்து பேசி வருகிறார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன். இதே போன்று இந்தியாவில் 65 சதவீதம் காவி மயமாகிவிட்டதாகவும், தமிழகமும் விரைவில் காவிமயமாகும் என்றும் தமிழிசை கூறி வருகிறார்.
பாஜக தேசிய செயலாளர் எச். ராஜாவும் ஆண்டாள் விவகாரத்தில் இது திராவிட மண். ஆனால் இந்த திராவிட மண்ணில் ஆன்மிக அரசியல் என்றும் திராவிடத்தை கேலி செய்யும் வகையில் கருத்து போட்டிருந்தார்.
தக்க பதிலடி
தமிழகத்தை தொடர்ந்து கேலி செய்து வரும் பாஜகவினருக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தக்க பதிலடி கொடுத்துள்ளார். கடலூரில் திமுக சார்பில் மொழிபோர் தியாகிகள் வீரவணக்க பொதுகூட்டம் நடைபெற்றது.
தமிழ்த்தாய்க்கு அவமானம்
இதில் பங்கேற்றுப் பேசிய திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழ்தாய்க்கு தற்போது அவமானம் ஏற்பட்டுள்ளது என்றும், விஜயேந்திரர் வருத்தம் தெரிவிக்காவிட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். தமிழகத்தில் மீண்டும் ஒரு மொழிப்போர் உருவாகும் நேரம் வந்து விட்டது என்றார்.
களவாணிப் பசங்களா
சாதாரணமாக சொல்கிறார்கள் கழகங்கள் இல்லாத தமிழகமாம். ஏய் களவாணிப் பசங்களா, உங்களைப் பார்த்து நான் கேட்கிறேன். இந்த மேடையில் நின்று திமுக மேடையை சொல்லவில்லை. புறம்போக்காக இருக்கும் நீங்களே ஒரு மேடை போட்டு அதில் நின்று பேசக்கூடிய தெம்பை திராணியை கொடுத்தது இந்த திராவிட மண் என்று பேசினார்.
ஸ்டாலின் ஆவேசப் பேச்சு
திராவிட மண் குறித்து பாஜக தலைவர்கள் தொடர்ந்து எழுப்பி வரும் கேலிப் பேச்சுகளுக்கு முதல்முறையாக ஸ்டாலின் ஆவேசமாகப் பேசியுள்ளார். சமூக வலைதளங்களில் ஸ்டாலினின் இந்த பேச்சு வைரலாகி வருகிறது. மதவாத எதிர்ப்பு சக்திகள், ஸ்டாலினின் இந்த பேச்சை வரவேற்று வருகின்றனர்.